ஆட்டை பிரியாணி போடுறோம்.. சொல்லி அடித்த டி ஆர் பி.ராஜா.. கோவையில் சம்பவம் செய்தது எப்படி?
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கணபதி வெல்வதற்கு அங்கே பணியாற்றிய அமைச்சர் டிஆர் பி ராஜா மிக முக்கியமான காரணமாக மாறி உள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் மிக கடுமையான போட்டி நிலவிய தொகுதி என்றால் அது கோவை தொகுதிதான்.

கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு இருந்தார். இது போக கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டதால அங்கே போட்டி தீவிரமானது. அதோடு அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டதால் இங்கே மும்முனை போட்டி உச்சம் பெற்றது.
மும்முனை போட்டி என்பதால் இங்கே மொத்த அரசியல் விமர்சகர்களின் கவனமும் பட்டது. ஏனென்றால் 2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்ததது. மூன்றாக பிரியும் வாக்குகளால் நிலைமை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
திமுக வெற்றிபெறுகிறது: இங்கே கடும் போட்டி நிலவிய நிலையில் திமுக வேட்பாளர் கணபதி 341769 வாக்குகள் பெற்றுள்ளார். அண்ணாமலை 271994 வாக்குகள் பெற்று 69775 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய உள்ளார். 200844 வாக்குகள் பெற்று சிங்கை மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கணபதி வெல்வதற்கு அங்கே பணியாற்றிய அமைச்சர் டிஆர் பி ராஜா மிக முக்கியமான காரணமாக மாறி உள்ளார்.
அதிமுகவிற்கு சாதகம் எது?: கோவையில் அதிமுகவிற்கு சாதகம் என்று பார்த்தால் அது வேட்பாளர்தான். அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டது பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது. ஏனென்றால் அதிமுக சில தொகுதிகளில் டம்மி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாக திமுகவினர் விமர்சனம் வைத்தனர்.
அதாவது பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் விதமாக அதிமுக சில தொகுதிகளில் டம்மி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாக திமுகவினர் புகார் வைத்தனர் . இப்படி இருக்க கோவையில் மிக கடினமான வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டது கவனம் பெற்றது. அதிலும் சிங்கை ராமச்சந்திரன் கோவையில் அதிமுகவின் அடையாளமாக உள்ள எஸ் பி வேலுமணிக்கு நெருக்கம். சிங்கை ராமச்சந்திரனை எஸ் பி வேலுமணியின் குட் புக்கில் இருப்பவர். இவரின் தேர்வே எஸ் பி வேலுமணியின் முடிவாக இருக்கலாம் என்றே கூறப்பட்டது.
அப்படி இருக்க சிங்கை ராமச்சந்திரனை வெற்றிபெற வைக்க எஸ் பி வேலுமணி கடினமான பணிகளை செய்தார். ஒரு பக்கம் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் இந்த தேர்தலை அதிமுக நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தீவிரமாக பணிகளை செய்தது.
அண்ணாமலைக்கு சாதகம் எது?: அண்ணாமலைக்கு சாதகம் என்றால்.. பாஜகவிற்கு சாதகமாக உள்ள 2-3 சதவிகித உறுதியான வலதுசாரி வாக்குகள். சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஒரு காலத்தில் வந்த வாக்குகள், வானதிக்கு கடந்த சட்டசபை தேர்தலில் வந்த வாக்குகள் ஆகிய வாக்குகளை வைத்து அண்ணாமலைக்கு கொஞ்சம் சாதகமான சூழல் இருந்தது.
அண்ணாமலை புதிய ஆள், பாஜக தேசிய அளவில் வெல்லும் பட்சத்தில் அமைச்சர் ஆகும் வாய்ப்பு, மோடி நேரடியாக வந்து பிரச்சாரம் செய்வது, ஆகியவை சாதகமாக மாறியது. டவுன் ஹால் உள்ளிட்ட சிட்டி உள்ளே இருக்கும் பகுதிகளில் தீவிர பாஜக ஆதரவு உள்ளது. கோவை தெற்கில் நகர பகுதிகளில் பாஜகவிற்கு ஆதரவான சூழல் உள்ளது. இது போக கோவை தெற்கு தொகுதியில் உள்ள சில வட மாநில மக்கள் அண்ணாமலைக்கு சாதகமாக இருப்பார்கள் என்பதும் பாஜகவிற்கு சாதகம்.
உடைத்த டிஆர் பி ராஜா: ஆனால் இந்த இரண்டு சாதகங்களை டி ஆர் பி ராஜா உடைத்துவிட்டார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கணபதி வெல்வதற்கு அங்கே பணியாற்றிய அமைச்சர் டிஆர் பி ராஜா மிக முக்கியமான காரணமாக மாறி உள்ளார். அண்ணாமலை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் கோவையில் இருந்த டிஆர் பி ராஜா.. கோவையில் திமுக வென்றால் பிரியாணி போடுவோம்.. அது ஆடு பிரியாணி என்பது உறுதியாகிவிட்டது என்று கூறினார்.
அதை தற்போது உண்மையில் செய்து காட்டி உள்ளனர். இதற்கு காரணம் அவரின் முறையான திட்டமிடல். கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சத்தமின்றி அங்கே களப்பணிகளை செய்து வந்தது. இதற்கு பெரிதும் திட்டமிடல்களை செய்தது டிஆர் பி ராஜா. அவர்தான் தேர்தலுக்கான தொகுதி பொறுப்பு.
இவர்கள் அண்ணாமலை போல இவர் மீடியாக்களில் அதிகம் தோன்றாமல் தீவிரமாக களப்பணிகளை செய்து வந்தனர். முக்கியமாக பூத் கமிட்டி வைத்து பூத் அடிப்படையில் வாக்காளர்களை தேடி தேடி வாக்கு சேகரித்தனர்.
பொதுவாக தேர்தலில் ஜெயிக்க மீடியா பலத்தை விட.. நேரடியாக களத்தில் பணிகளை செய்வது முக்கியம். அப்படித்தான் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்காக டி ஆர் பி ராஜா அங்கே உள்ள அமைப்புகள், பிரிவுகள், தொழிற்சங்கங்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளை செய்து வாக்கு சேகரித்து வந்தார் . பெரிதாக செய்திகளில் தோன்றாமல் நேரடியாக களப்பணிகளை செய்து வந்தார். அங்கே வாக்குகளை பெரிய அளவில் தீர்மானிக்கும் சங்கங்கள், அமைப்புகளை சந்தித்து கணபதி ராஜ்குமாரும் வாக்குகளை கேட்டார்.
அதன் ஒரு கட்டமாக கோவை சூலூரில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது பெரிய திருப்பமாக மாறியது. இவர்களின் ஆதரவு மொத்தமாக திமுகவிற்கு செல்லும் என்பதால் மிகப்பெரிய வாக்கு வங்கி இங்கே சாதகமாக திரும்பியது.
டிஆர்பி ராஜா சம்பவம்: இங்கே நேரடியாக டிஆர்பி ராஜா களமிறங்கி மிக தீவிரமாக பணிகளை செய்து வந்தார். செந்தில் பாலாஜி இல்லாத நிலையில் அங்கே திமுக நிர்வாகிகள் இடையே இது ஒரு வித ஒற்றுமையை புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக இவர் ஸ்மார்ட்டாக செயல்பட்டு அதிமுக - பாஜக மோதலால் பிரியும் வாக்குகளை குறி வைத்தார்.
முக்கியமாக அங்கே ஒரு ஜாதியின் வாக்குகள் அதிமுக - பாஜக இடையே பிரியும். இந்த நிலையில் தலித் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், கேரளாவில் இருந்து வந்தவர்களின் வாக்குகள், அந்த குறிப்பிட்ட ஜாதிக்கு வெளியே இருக்கும் வாக்குகள் மூலம் வெல்ல முடியும் என்பதை குறி வைத்து ராஜா காய் நகர்த்தி வந்தார் .
இதெல்லாம் தற்போது பலன் அளித்து அண்ணாமலையை திமுக வீழ்த்துவதற்கு முக்கியமான காரணமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications