கோவை மாணவி தற்கொலை.. தனியார் பள்ளி முதல்வர் மீரா கைது செய்யப்பட்டது எப்படி? போலீஸ் ஆபரேஷன் பின்னணி!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு போலீசார் குழு நடத்திய ஆபரேஷனில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. தொடர் பாலியல் துப்புறுத்தல்களால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து அந்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். மாணவியை இவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வந்ததும், பள்ளியை விட்டு வெளியேறி வேறு பள்ளிக்கு மாணவி சென்ற பின்பும் மிதுன் சக்ரவர்த்தி மாணவியை துன்புறுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ப்பா இவ்வளவு கோடியா! நாகையில் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸை விற்க முயன்ற மீனவர்கள்.. வளைத்த போலீஸ்
பாலியல் துன்புறுத்தல்
தொடர் துன்புறுத்தல்கள் குறித்து அந்த மாணவி தனது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் புகார் அளித்தும் கூட அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை காரணமாக வைத்துக்கொண்டு மிதுன் சக்ரவர்த்தி தொடர்ந்து அந்த மாணவி மீது பாலியல் தாக்குதல்களை நடத்தி உள்ளார். இந்த நிலையில்தான் அந்த மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
கைது
இதை தொடர்ந்து கோவையில் போராட்டம் வலுத்த நிலையில் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என்று நேற்று பள்ளி வளாகம் முன் பொது மக்கள் போராடி வந்தனர்.
முதல்வர்
மாணவியின் தற்கொலை சம்பவத்தில் தொடர்புடைய எல்லோரையும் கைது செய்ய வேண்டும். முக்கியமாக முதல்வர் மீரா ஜாக்சன்தான் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை முதலில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கும் பதியப்பட்டது.
தலைமறைவு
ஆனால் தான் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்து மீரா ஜாக்சன் தலைமறைவானார். இவரை கைது செய்வதற்காக போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கோவை பகுதிகளில் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று பள்ளி வளாகம் முன் போராட்டம் நடந்து வந்த நிலையில் மீரா ஜாக்சனை துரிதமாக கைது செய்ய வேண்டும் என்று இரண்டு போலீசார் குழுவும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
சோதனை
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனின் உறவினர் வீடுகளில் போலீசார் சோதனை செய்துள்ளனர். பள்ளியில் அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஆசிரியர்களிடம் விசாரணையை செய்துள்ளனர். இதில் அவரின் உறவினர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மீரா ஜாக்சனுக்கு பெங்களூரில் சில உறவினர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதோடு இவருக்கு கேரளாவிலும் உறவினர்கள் இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூர்
வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே மீரா ஜாக்சன் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாரின் ஒரு குழு பெங்களூர் விரைந்தது. இன்னொரு குழு கேரளாவிற்கு விரைந்தது. பெங்களூரில் போலீசார் நடத்திய சோதனையில் மீரா ஜாக்சன் தனது உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நடவடிக்கை
கைது செய்யப்பட்ட மீரா ஜாக்சனை கோவை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின் ரிமாண்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளியில் உள்ள மேலும் சில ஆசிரியர்கள் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு பின் கைதாகவும் வாய்ப்பு உள்ளது.