தேர்தலுக்கு முன்பு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்தால்.. அண்ணாமலைக்கு கடும் சவால்
கோவை: உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஒருவேளை தேர்தலுக்கு முன்பு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்தால், கோவையில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை நீதிமன்றம் பலமுறை தள்ளுபடி செய்துவிட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில். சென்னை உயர்நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவருக்கு எதிரான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ராம்சங்கர், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மனுதாரர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 280 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடைய நாள்தோறும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரருக்கு எதிரான உண்மையான ஆதாரங்கள் இல்லை.
மனுதாரருக்கு எதிராக அமலாக்கத்துறை தெரிவிக்கும் பண மோசடி ஒரு கோடியே நான்கு லட்சமாகும். ஆனால் மனுதாரரின் ஊதியமோ 75 லட்சமாகும். இத்துடன் பைபாஸ் சிகிச்சைக்கு பின் மனுதாரர் உடல் பரிசோதனை நாள்தோறும் செய்து வருகிறார். ஜாமீனுக்கான எந்த ஒரு நிபந்தனையும் ஏற்க தயாராக உள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயார்.. எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 1-ந்தேதி விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அன்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால், அடுத்த ஓரிரு நாளில் வெளியே வருவார்.. அப்படி வந்தால் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தால், கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு ஊக்கமாக இருக்கும் என்று திமுகவினர் நம்புகிறார்கள்..
அண்ணாமலைக்கு ஏற்கனவே கடும் சவாலான இரண்டு பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் எஸ்பி வேலுமணியின் தீவிர ஆதரவாளரான சிங்கை ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் அதிமுக மேயரான கணபதி ராஜ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் கோவை தொகுதி மிகவும் கவனிக்கப்படும் விஐபி தொகுதியாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications