கோவையில் சரியாக மூடப்படாத சாலைப் பள்ளம்.. பிரேக் அடித்த கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்
கோவை: கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் சரியாக மூடப்படாத சாலைப் பள்ளத்தால் திடீரென கார் பிரேக் அடித்த நிலையில், வேகமாக பைக்கில் வந்து கார் மீது மோதி இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் காயம் அடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
தமிழகத்தில் தேசிய நெடுஞசாலைகள்,மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள் ஓரளவு நல்ல நிலையில் இருக்கின்றன. ஆனால் பல இடங்களில் சாலைகளில் உண்மையில் பல இடங்களில் மிக மோசமாக உள்ளது. குறிப்பாக மாநகராட்சிக்குள் உள்ள சாலைகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் உள்ள சாலைகளின் நிலை கவலைக்கிடமான வகையில் இருக்கிறது. அதேநேரம் தேசிய நெடுஞ்சாலைகளில், மாநில நெடுஞ்சாலைகளில் எங்காவது ஒரு இடத்தில் பள்ளமாக இருக்கும். அந்த பள்ளங்கள் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு எமனாக மாறுகின்றன.

அப்படித்தான் கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் சரியாக மூடப்படாத சாலைப் பள்ளத்தால் விபத்து நடந்துள்ளது. சரியாக மூடப்படாத சாலைப் பள்ளத்தால் திடீரென கார் பிரேக் அடித்த நிலையில், வேகமாக பைக்கில் வந்து கார் மீது மோதி இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவையில் முன்னதாக சிலமாதம் முன்பு திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடை காரணமாக சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அதன்பின்னர் விசாரித்த போது, அந்த வேகத்தடையை கல்வி நிறுவனம் ஒன்று சுயமாக அமைத்தது தெரியவந்தது. இதுபோன்ற திடீரென உருவாக்கப்படும் வேகத்தடைகள், கோவையில் போலீசார் வைக்கும் பேரிகார்டகளும் விபத்துக்கு காரணமாக உள்ளன.
கோவையில் மட்டுமல்ல, சென்னையில் தாம்பரம், சேலையூர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம் என சென்னையின் புறநகர் பகுதிகள் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பேராபத்தில் சிக்கும் வகையில் பள்ளங்கள் அதிகமாக உள்ளன. சாலையில் பள்ளங்களை ஏற்படுத்தினால் அதை மூடுவதுடன் விட்டுவிடுகிறார்கள். புதிதாக தார் சாலை அமைத்து மில்லிங் செய்வது இல்லை. இதனால் மூடப்பட்ட இடம், பெரிய பள்ளமாக மாறுகிறது. அந்ந இடங்கள் எல்லாம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எமனாக மாறுகிறது.
எனவே அரசு, மின்சாரம், குடிநீர், கேபிள் என எந்த துறையினை சேர்ந்தவர்கள் சாலைகளை தோண்டினாலும் அவர்களே அந்த சாலையை புதுசு போல் பழையபடி மாற்றித்தர வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். சாலைகளில் பள்ளம் தோண்டி பணி செய்ய ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் சாலைகளை மூடி தரமான சாலையை அமைக்கவும் உத்தரவிட வேண்டும். அதேபோல் புதிதாக சாலை அமைத்தால், ஓராண்டில் எத்தனைமுறை சேதம் நடந்தாலும் ஒப்பந்ததார்களே பொறுப்பு என சட்டம கொண்டு வர வேண்டும் என்றும் அப்படி செய்தால் தான் தரமான சாலைகள் அமையும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேநேரம் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் வாகனங்களின் டயர்களில் காற்று போதிய அளவு இருப்பதை உறுதி செய்து கொண்டால் பள்ளத்தில் போகும் போது, பாதுகாப்பாக இருக்க ஓரளவு உதவும் என்றும் சில நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications