நீதிபதி நந்தினிதேவி பணியிட மாற்றம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்ன ஆகும் தீர்ப்பு?
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தையே நடுங்கச் செய்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மே 13 ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவி உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னவாகும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டில் பெண்கள், மாணவிகள் என பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்ணா அடிக்காதீங்க, அண்ணா அடிக்காதீங்க என்று பெண்கள் கதறி அழுத சப்தத்தை யாராலும் மறக்க முடியாது.

இந்த வழக்கில் அதிமுக பிரமுகர்களின் பிள்ளைகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 50 பேர் சாட்சி அளித்துள்ளனர். 200 ஆவணங்கள், 40க்கும் மேற்பட்ட மின்னணு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் அரசுத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து, அண்மையில் சேலம் மத்திய சிறையில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 9 பேரிடமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த பதில்கள் வீடியோ சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மே 13 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
இந்த கொடூர வழக்கின் தீர்ப்பு தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினிதேவேியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், நீதிபதி நந்தினிதேவியின் பணியிட மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி அந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்த பின்னரே கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.











Click it and Unblock the Notifications