சாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்- கமல் கடும் விமர்சனம்
சூலூர்: சாக்கடையை சரி செய்ய சொன்னால் தமிழக அரசோ , சாராய கடைகளை திறக்கிறது என்று சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார். இதையடுத்து அவர் சின்னியம்பாளையம், தென்னம்பாளையம், சோமனூர், உள்ளிட்ட பகுதிகளில் அவர் அனல் பறக்க பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த இரு கட்சிகளையும் நம்பி மக்கள் ஏமார்ந்து விட்டனர். வரி போட்டு தறியை முடக்கிய மத்திய அரசும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள மாநில அரசும் சரியானவை அல்ல.

தமிழகத்தில்
இதை நீங்கள் உணர வேண்டும். அது மட்டுமல்லாது இவர்களுக்கு மாற்று நாங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நியாயமான நல்ல அரசியல் தொடக்கத்தை மக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழகம்
சாக்கடைகள் தெருவில் ஓடுகின்றன. சாக்கடையை சுத்தம் செய்ய கூறினால் அரசோ சாராய கடைகளை திறக்கிறது. நமக்கென்ன என்று ஒதுங்கி நடந்ததால் நாடு என்னவாகும் என்பதற்கு இன்றைய தமிழகம் உதாரணமாகும்.

கலைப்பணி
நானும் உங்களில் ஒருவனாக இருந்து இவர்களை வேடிக்கை பார்த்து சலித்து போய் கடைசியில் நாமாவது செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் உங்களுக்காக வந்தேன் என்பதை விட எனக்காக வந்தேன் என்பதே உண்மை. என்னை 60 ஆண்டுகளாக தூக்கி பிடித்திருக்கும் இந்த மக்களுக்காக நான் செய்தது கலைப்பணி மட்டுமே.

அரசியல்
இத்தனை நாளாக ஊதியம் வாங்கி விட்டு தான் கலை சேவை செய்தேன். இனி வெறும் கலைஞனாக எனது வாழ்க்கையை முடித்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் அரசியலுக்கு வந்தேன் என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications