நேரில் வாங்க.. வரும் 15ம் தேதி ஆஜராக எடப்பாடிக்கு கோவை கோர்ட் சம்மன்.. அவதூறு வழக்கில் அதிரடி
கோவை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் வழங்கி உள்ளது.
அதிமுகவின் முன்னாள் எம்பியாக இருந்தவர் கேசி பழனிச்சாமி. இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட புகாரில் அவர் கடந்த 2018 ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது அதிமுகவுக்கு எதிராகவும், அந்த கட்சியின் பொதுசசெயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை ஒன்றாக இணைக்க கேசி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்தனர். இதுபற்றி கடந்த ஆண்டு ஜூன் மாதம் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்தார். அதாவது கோவை விமான நிலையம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஒருங்கிணைப்பு குழு பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பதிலளித்தார். அதாவது, ‛‛ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு அதிமுக சார்பாகப் பதில் சொல்ல வேண்டுமா?'' என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி கேசி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று கூறினார். இதனால் கோபமான கேசி பழனிச்சாமி தன்னை பற்றியும் ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் எடப்பாடி பழனிசாமி அவதூறாக கருத்து தெரிவித்ததாக கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அதோடு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து தொடர்பான வீடியோவை ஆதாரமாக வழங்கினார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். வரும் 15ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு இந்த வழக்கை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications