ஐடி பெண் ஊழியர்களின் அறையில் எட்டிப் பார்த்த நபர்.. அடுத்து செய்த காரியம்.. கோவையில் ஷாக்
கோவை: கோவையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து தங்கி ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஈச்சனாரி பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் இன்று காலையில் புகுந்து அங்கிருந்த லேப்டாப்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் ஏராளமான முன்னணி கல்வி நிறுவனங்கள், பிரபலமான ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் போன்ற பல்வேறு தேவைகளுக்காக கோவையில் வசித்து வருகின்றனர்.

சமூக விரோத சம்பவங்கள்
குறிப்பாக, கோவையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். கோவையில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, நகைப் பறிப்பு, திருட்டுச் சம்பவம் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் விடுதி அறைக்குள் நுழைந்து லேப்டாப்பை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறைக்குள் வந்த மர்ம நபர்
கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் ரத்தினம் ஐ.டி. பார்க் உள்ளது. இந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண்கள் சுந்தராபுரம் - மதுக்கரை மார்கெட் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கிப் பணியாற்றி வந்துள்ளனர். இரண்டு பெண்களும் விடுதியில் இருந்து காலையில் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் அறைக்கு வந்துள்ளார்.
லேப்டாப் திருட்டு
அந்த மர்மநபர் அறையின் வாசலில் நின்று ஐன்னல் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்துள்ளார். பின்னர், அறைக்குள் நுழைந்து அங்கிருந்த இரண்டு லேப்டாப்புகளை திருடிச் சென்றுள்ளார். மீண்டும் அறைக்குத் திரும்பிய ஐ.டி. ஊழியர்கள் லேப்டாப் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது லேப்டாப்பை மர்மநபர் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் குறித்து கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில் இரு பெண்களும் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications