ஒரே நேரத்தில் 2 காதல்.. ஒன்றாக வீட்டுக்கு வந்த காதலிகள்! கோவையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
கோவை: கோவை அருகே ஒரே நேரத்தில் வாலிபர் ஒருவர் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் இரண்டு காதலிகளுக்கும் தெரிந்துவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த வாலிபர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 30 வயதான இவர் எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வருகிறார். கோவையில் உள்ள தியேட்டரில் வேலை செய்து வந்த செல்வம், மதுரையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். வெளியூரில் இருந்ததால் இருவரும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இளம்பெண் கோவைக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் கோவையில் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர். இதற்கிடையே, செல்வத்திற்கு கோவையில் கணவரை பிரிந்து வாழும் மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் வாயிலாக அந்த பெண்ணின் அறிமுகம் செல்வத்திற்கு கிடைத்து இருக்கிறது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்த அந்த பெண்ணையும் செல்வம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதனை நம்பி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த பெண்ணும், செல்வத்துடன் நெருக்கமாக பழகி வந்து இருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் பழகி வந்து இருக்கிறார் செல்வம். காதல் மன்னனாக வலம் வந்த செல்வம், பல மாதங்கள் இரண்டு பேருக்கும் தெரியாமல் இரட்டை காதலை செய்து வந்து இருக்கிறார்.
இந்தநிலையில் தான், மதுரையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு செல்வத்தின் நடவடிக்கையில் சந்தேகம் வந்து இருக்கிறது. இதனால், அவரது நடவடிக்கைகளை கண்காணித்து இருக்கிறார். இதில், அவருக்கு சந்தேகம் மேலும் வலுத்தது. இதையடுத்து, செல்வத்திடம் இது பற்றி கேட்டுள்ளார். அப்போது, கோவையில் மற்றொரு பெண்ணுடன் செல்வம் சுற்றிக்கொண்டு இருக்கும் தகவல் கிடைத்தது. இதனால், அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே, கோவை பெண்ணுக்கும் செல்வத்தின் காதல் விளையாட்டுக்கள் தெரியவந்தது. இதையடுத்து கோவை பெண், செல்வத்திடம் இரண்டு பேரை ஒரே நேரத்தில் காதலிப்பாயா? இப்படி ஏமாற்றிவிட்டாயே என செல்போனில் கேட்டு இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் செல்வம். இதற்கு மத்தியில் இரண்டு காதலிகளும் செல்வத்தை சந்திக்க அவரது அறைக்கு ஒரே நேரத்தில் வருவதாக செல்போனில் கூறினர்.
இரண்டு காதலிகளிடமும் கையும் களவுமாக பிடிபட்டதால் அதிர்ச்சி அடைந்த செல்வம் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்துபோயுள்ளார். இனிமேல் சமாளிக்க முடியாது என நினைத்து விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது ரூமில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு இடையே செல்வத்தின் இரு காதலிகளும் அங்கு வந்துள்ளனர். அறையில் உள்பக்கமாக பூட்டி கிடந்ததால், செல்வம் உள்ளேதான் இருக்கிறார் என நினைத்து கதவை தட்டியுள்ள்னர்.
ஆனால் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. அதேநேரத்தில் செல்போனும் எடுக்காமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த இரண்டு பெண்களும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது செல்வம் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து இரண்டு பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞர் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்கொலை தடுப்பு உதவி எண்கள்: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது, தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது icallக்கு (Free · Confidential · Hours: 10:00 am to 8:00 pm, Monday to Saturday) 091529 87821 என்ற எண்ணில் அழையுங்கள்.












Click it and Unblock the Notifications