மங்களூர் பயங்கரவாதியின் டார்கெட்டில் ஜக்கி வாசுதேவின் கோவை ஈஷா மையம்? வாட்ஸ் அப் டிபியால் சந்தேகம்!
கோவை: மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கின் தாக்குதல் டார்கெட் பட்டியலில் ஜக்கி வாசுதேவின் கோவை ஈஷா மையம் இருந்திருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி உள்ளன. பயங்கரவாதி ஷாரிக்கின் வாட்ஸ் அப் டிபியில் ஈஷா மையம் சிவன் சிலை வைக்கப்பட்டிருந்ததால் இந்த சந்தேகம் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு கடந்த 19-ந் தேதி வெடித்து சிதறியது. இச்சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணித்த ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பயங்கரவாதி ஷாரிக்
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஷாரிக், ஒரு பயங்கரவாதி என்பதும் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய நபர் என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்தான் ஷாரிக் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஷாரிக்- கோவை தொடர்புகள்
அத்துடன் ஷாரிக்குக்கும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த முபினுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. ஷாரிக், கோவை சிம் கார்டை பயன்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் தமிழகம், கேரளாவுக்கு ஷாரிக் பலமுறை சென்று வந்ததும் தெரியவந்தது. அத்துடன் போலியான பெயர்களில் அவர் ஹோட்டல்களில் தங்குவதும் whatsapp எண்களை பயன்படுத்துவதுமாக இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஈஷா ஆதி யோகி சிலை
இந்த நிலையில் ஷாரிக் பயன்படுத்திய செல்போனின் பெயரை பிரேம்ராஜ் என்ற பெயரில் பயன்படுத்தி இருக்கிறார். அப்படி ஷாரிக் பயன்படுத்திய whatsapp எண்ணில் கோவையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஈஷாவின் ஆதியோகி சிலையை டிபி (DP) ஆக வைத்திருந்ததாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஈஷா மையத்துக்கு டார்கெட்?
ஜக்கி வாசுதேவின் கோவை ஈஷா மைய ஆதியோகி சிலை படத்தை டிபியாக கொண்ட whatsapp எண் குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் அதாவது நவம்பர் 18-ந் தேதி வரை செயல்பட்டிருந்ததும் தெரிய வந்ததுள்ளது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஷாரிக் கோவை வந்தபோது ஈஷா மையம் சென்று வந்தாரா? அவருடன் வேறு யாரும் அங்கு சென்று வந்தனரா? தம்முடைய பயங்கரவாதி என்ற அடையாளத்தை மறைக்க வாட்ஸ் ஆப்-பி்ல் இந்துத்துவா ஆதரவாளரைப் போல ஆதி யோகி சிலையை டிபியாக வைத்துள்ளாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஷாரிக் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் ஈஷா மையம் இருந்ததா? என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications