ஆசையாக ஓடி வந்த நாய்களுக்கு.. விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்! கோவை கவுண்டம்பாளையத்தில் ஷாக்!
கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு குடியிருப்பு வாசிகள் விஷத்தைக் கலந்த உணவைக் கொடுத்துள்ளனர். சாப்பாட்டைப் பார்த்தவுடன் ஓடி வந்து சாப்பிட்ட தெரு நாய்கள், விஷத்தின் வீரியத்தால் அடுத்தடுத்து மிக மோசமான முறையில் உயிரிழந்தது. இது குறித்து விலங்குகள் நல அமைப்பினர் புகார் அளித்த நிலையில், கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெருநாய் பிரச்சினை என்பது பல்வேறு ஊர்களிலும் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. தெரு நாய்கள் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் டூ வீலர்களில் செல்வோர் பார்த்துப் பார்த்தே செல்ல வேண்டி இருக்கிறது.

தெரு நாய்கள்
இதுபோல நாய்கள் பிரச்சினை அதிகம் இருந்தால் நாம் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆனால், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடியிருப்பு நல சங்கத்தினர் கொடூரமான செயலில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பல தெரு நாய்கள் உயிரிழந்துள்ளன.
அதாவது கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் நபர்களைத் துரத்துவது, கடித்தும் அச்சுறுத்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நலச் சங்கத்தினர் 15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்குச் சாப்பாட்டில் விஷம் வைத்து உள்ளனர்.
விஷம் வைத்து கொடூரம்
உணவில் விஷம் இருப்பதை அறியாத நாய்கள், சாப்பாட்டைக் கண்டதும் ஆசையாக ஓடி வந்து சாப்பிட்டுள்ளன. கொஞ்ச நேரத்தில் விஷம் ரியாக்ட் ஆகத் தொடங்க வரிசையாக நாய்கள் செத்து மடிந்துள்ளன. இது தொடர்பாக அந்த பகுதி ஒருவரே விலங்குகள் நல வாரியம் சங்கத்தினருக்குப் புகார் அளித்து உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த விலங்கு நல வாரியத்தினர், இறந்து கிடந்த நாய்களை அப்புறப்படுத்தினர். மேலும், உயிருக்குப் போராடிய நாய்களை மீட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
போலீஸ் விசாரணை
இருப்பினும், விஷத்தின் வீரியத்தால் சிகிச்சையில் பலனின்றி உயிருக்குப் போராடிய பல நாய்கள் இறந்து விட்டன. உயிரிழந்த நாய்களின் உடலை உடல் கூறு ஆய்வு செய்ததில் நாய்கள் உடலில் விஷம் இருந்தது உறுதியானது. இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் விலங்குகள் நல அமைப்பினர் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
இங்குப் பலரும் நாய்களை கிட்டதட்ட ஒரு பிள்ளை போலவே வளர்த்து வருகிறார்கள். தடுப்பூசி, மருந்து என்று நாய்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துப் பார்த்துப் பார்த்து வளர்ப்பார்கள். நாய் வளர்க்க முடியாதவர்கள் தெரு நாய்களுக்கு உணவு வைத்தும் கூட நாம் பார்த்திருப்போம். ஆனால், குடியிருப்பு வாசிகளுக்கு பல நேரங்களில் தெரு நாய்கள் பிரச்சினையாகவே இருக்கிறது.
ஆனால், அவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் இதுபோல விஷம் கலந்த உணவை எல்லாம் தரக்கூடாது. நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் மட்டுமே தர வேண்டும். அவர்களே நாய்களைப் பிடித்துச் சென்று குடும்ப கட்டுப்பாடு செய்து நாய்கள் மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வார்கள்.












Click it and Unblock the Notifications