என்ன வாக்கு வங்கி இருக்கு?.. விஜய் குறித்த கேள்வியால் கோபமடைந்த செந்தில்பாலாஜி
கோவை: கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தபோது, விஜய் குறித்த கேள்விக்கு என்ன வாக்கு வங்கி இருக்கு என்று கேட்டு மிகவும் டென்ஷன் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேஷத்தால் தமிழக அரசியலில் அனல் பறந்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பாம் ஒன்றையும் வீசியிருந்தார்.

திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவும் விஜய் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விஜய் குறித்த கேள்விக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோபமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், ஆர்எஸ்.புரத்தில் ரூ. 9.67 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச ஹாக்கி மைதானம் பணிகள் துவங்கப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு இன்று செய்தார். மாதிரி பள்ளி விடுதி கட்டடத்தையும் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை விளையாட்டுக்கான தலைநகராக்கும் வகையில் விளையாட்டுத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஹாக்கி வீரர்களின் கோரிக்கையை ஏற்று கோவையில் சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளது. அதேபோ, 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய பணிகளும் ஆய்வு செய்யப்படுகின்றது. கோவையின் வளர்ச்சிக்காக 200 கோடி ரூபாயை முதல்வர் அறிவித்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும்.
ஏற்கனவே முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகளும் துவங்கப்பட உள்ளன. கடந்த ஆட்சியில் சாலைகள் போடப்படாமல் விட்டதால் இப்போது சாலை பணிகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
ரூ. 200 கோடி நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின் மாற்றி கொள்முதல் செய்யப்பட்டதில் மின்வாரியத்தில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அந்த நடைமுறைதான் இப்போதும் பின்பற்றப்படுகின்றது. அதில் எந்தவிதமான தவறுகளும் நடைபெறவில்லை. இதில் வேறு யாருடைய தலையீடும் இல்லை. ஆன்லைன் முறைப்படியே விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்துள்ளன. இதற்கான குழுவில் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர் என்றார்.
தொடர்ந்து விஜய் அரசியல் கட்சி துவங்கியிருப்பது குறித்த கேள்விக்கு, என்ன ஒரு வாக்கு வாங்கி இருக்கின்றது என்று தெரியாத சூழல் இருக்கிறது. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. குறைவாக சொல்லவில்லை. அரசியல் சார்ந்த கேள்விகளை அரசியல் நிகழ்ச்சிகளில் கேளுங்கள் என்று கூறினார்.
பின்னர், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 38 வது வார்டு ஐஓபி காலனியில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்தார். மேலும் சங்கனூர் ஓடை பகுதிகள் ஆய்வு, நுண்ணறிவு பிரிவுக்கான ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டுதல், மதுக்கரையில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியை திறந்து வைத்தல், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications