ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம்.. நீங்க பாஜகவோடு கூட்டணி வச்சா சரி, நாங்க வச்சா தப்பா? கோவையில் எடப்பாடி
கோவை: கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, மேட்டுப்பாளையத்தில் மக்களை சந்தித்தார். அப்போது அவர், இன்று இங்கு வந்துள்ள கூட்டத்தை பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் ஏற்படலாம் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், வரும் தேர்தலில் தீயசக்தி திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது சரி.. நாங்கள் கூட்டணி வைத்தால் தவறா? என்றும் கேள்வி எழுப்பினார்.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக இந்த முறை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் என்று கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கினார்.

சோர்வை நீக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி தேர்தல் களத்திற்கு முழு வேகத்தில் அவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, மேட்டுப்பாளையத்தில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் ஏற்படலாம் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள் நடமாட முடியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. அஜித் குமார் என்ற இளைஞரை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சாதாரண மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா, ஸ்டாலினுக்கு நியாபக மறதியா.. கடந்த 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து தானே போட்டியிட்டது. ஏன் மறந்துவிட்டாரா.. நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது சரி.. நாங்கள் கூட்டணி வைத்தால் தவறா? மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நீங்க தமிழகத்துக்கு செய்த திட்டங்கள் எதாவது ஒன்று இருக்கிறதா..
எதுவுமே செய்யவில்லை. 10 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யவில்லை. கொள்ளை தான் அடித்தீர்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் உயர்த்தப்படவில்லை. அது 40 நாள் என்று ஆகிவிட்டது. கொள்ளையடிப்பதுதான் திமுகவின் குறிக்கோளாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணம் 52% அதிகரித்துள்ளது.
எத்தனையோ அறிவிப்புகளை சொல்லி ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. ஓட்டு போட்ட மக்களுக்கு நாமம் சாத்திவிட்டார். அத்தனையும் பொய் அறிவிப்பு. வரும் தேர்தலில் தீயசக்தி திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இன்று வந்துள்ள கூட்டத்தை பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் ஏற்படலாம். இவ்வாறு எடப்பாடி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை கோவையில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் 34 தொகுதிகளில் உள்ள மக்களையும் கட்சியின் நிர்வாகிகளையும் சந்திக்கிறார். இன்று எடப்பாடியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications