செந்தில்பாலாஜி பாராட்டு விழாவுக்கு தேதி கேட்டார்! நான் வேண்டாம் என்றேன்! உடைத்து பேசிய முதல்வர்!
கடமையை தான் செய்திருப்பதாகவும், பாராட்டு விழா எதற்கு என செந்தில்பாலாஜியிடம் தாம் கேட்டதாகவும் ஸ்டாலின் பேச்சு.
கோவை: தனக்கு பாராட்டு விழா நடத்த தன்னிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி தேதி கேட்ட போது, ''எதற்கு விழா, நான் என் கடமையைத் தானே செய்திருக்கிறேன்'' எனக் கூறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
மேலும், தனக்கான ஒரு டார்கெட்டை அவரே உருவாக்கி வைத்துக்கொண்டு அதை செய்து காட்டக்கூடிய ஆற்றல் செந்தில்பாலாஜிக்கு உண்டு எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது;

தேதி கேட்ட செந்தில்பாலாஜி
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களுடைய கூட்டமைப்பு சார்பில் உங்களுக்கு நன்றி அறிவிக்கக்கூடிய பாராட்டு விழா நடத்த இருக்கிறோம், அதற்கு நீங்கள் தேதி வழங்கிட வேண்டும் என்று இந்த மாவட்டத்தின் அமைச்சர், செந்தில்பாலாஜி என்னிடத்தில் கேட்டபோது, எதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள் என்று நான் கேட்டேன். விசைத்தறிக்கு மின்கட்டண சலுகை வழங்கியதற்காக நன்றி தெரிவிக்க இருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

கடமையை செய்தேன்
இதில் நன்றி தெரிவிக்க என்ன இருக்கிறது, நான் என் கடமையைத் தான் செய்திருக்கிறேன் என்று அவரிடம் நான் சொன்னேன். கைத்தறியாக இருந்தாலும் விசைத்தறியாக இருந்தாலும் ஆடைகளை உற்பத்தி செய்கின்ற நெசவாள தோழர்களுக்கு உதவி செய்வதை நான் என்னுடைய கடமையாகத்தான் கருதுகிறேன்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
எப்போதும் எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர் நம்முடைய அமைச்சர் செந்தில்பாலாஜி. நான் அவரை அடிக்கடி சொல்வேன், டார்கெட் அமைச்சர் என்று சொல்வேன். தனக்கான ஒரு டார்கெட்டை அவரே உருவாக்கி வைத்துக்கொண்டு அதை செய்து காட்டக்கூடிய ஆற்றல் நம்முடைய செந்தில்பாலாஜிக்கு உண்டு. அது கட்சிக்காக இருந்தாலும் சரி, ஆட்சிக்காக இருந்தாலும் சரி, அந்த இலக்கை அடைந்து காட்டுவார்.

இலவச மின் இணைப்புகள்
ஒன்றரை லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்கியதன் மூலமாக அரசுக்கு மிகப்பெரிய மதிப்பு விவசாய தொழிலாளர்களிடையே அது கிடைத்திருக்கிறது. கடந்த பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை ஒரு கட்சி ஆண்டது. அந்த பத்தாண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள்தான் வழங்கப்பட்டது. ஆனால், நாம் இருபதே மாத காலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம்.

சொல்லாமலும் செய்வோம்
இதைதான் அடிக்கடி நாங்கள் சொல்வது உண்டு,"சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்!" - இது கலைஞரின் முழக்கம்! "சொல்லாததையும் செய்வோம் சொல்லாமலும் செய்வோம்!" - இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய முழக்கம்.அந்த வரிசையில்தான் சொல்லாமல் இத்தனை சாதனைகளை நாம் செய்து காட்டியிருக்கிறோம்.












Click it and Unblock the Notifications