மிக கனமழைக்கான எச்சரிக்கை! அரக்கோணத்திலிருந்து.. கோவை, நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை
கோயம்புத்தூர்: கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மிகன கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அரகோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் பெய்த கனமழை பெரும் வெள்ளத்தையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 270 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒருவாரம் வரை மீட்பு பணிகள் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில், "தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
2 மற்றும் 3ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4 முதல் 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 குழுக்களைச் சேர்ந்த 60 வீரர்கள் வாகனங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அவ்வப்போது மண் சரிவு காரணமாக சில உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
அதாவது கடந்த 6ம் தேதி வெலிங்டன் ராணுவ பகுதியில் ஒருவர், கடந்த மார்ச் மாதம் 13ம் ஊட்டி பாப்சா லைனில் தேதி இருவர், ஊட்டி லவ்டேல் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி 6 பேர், 2017 ஜூன் 10ம் தேதி குன்னுார், சி.எம்.எஸ்., பகுதியில் ஒருவர், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி குன்னுார் டிரம்ளா எஸ்டேட்டில் நான்கு பேர் என மண் சரிவில் சிக்கி தொடர்ந்து பலர் பலியாகி வந்திருக்கின்றனர்.
வயநாட்டை தொடர்ந்து கோவை மற்றும் ஊட்டியில் மண் சரிவு அபாயம் அதிகம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications