கோவை கார் வெடிப்பிற்கும்.. இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கும் உள்ள கனெக்ஷன்! என்ஐஏ விசாரணையில் பகீர்
கோவை: கோவையில் கடந்தாண்டு கோயில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து சில பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு அக். மாதம் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. அதிகாலை நேரத்தில் கோவில் முன்பு நின்று இருந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது
கோயில் முன்பு காரில் வெடிப்பு ஏற்பட்டதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோவை கார் வெடிப்பு
கார் வெடிப்பு சத்தத்தைக் கேட்டவுடன் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், அதற்குள் உள்ளே இருந்த நபர் அப்படியே தீயில் கருகி உயிரிழந்தார். முதலில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டதாகவே கூறப்பட்டது. இருப்பினும், விசாரணையில் தான் இது பயங்கரவாத செயல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இதில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர்.

ஐஎஸ் பயங்கரவாதி
மேலும், பயங்கரவாதிகள் செயல் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப்பட்டது. இதனிடையே இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து மேலும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கார் வெடிப்பில் தொடர்புடையவர்கள் இலங்கையில் 2019இல் ஏற்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட சஹ்ரான் ஹாசிம் என்பவரால் ஈர்க்கப்பட்டனர் என்றும் ஹாசிமால் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் ஐஎஸ் பயங்கரவாதிகளாக ஆனதாகவும் என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12 பேருக்கு தொடர்பு
இந்த கோவை வெடிப்பில் 12 பேருக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்துள்ளன. அவர்கள் ஹாஷிமால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் ஹாஷிமின் பல வீடியோக்களை தொடர்ந்து பார்த்துள்ளனர். கோவை வெடிப்பிற்கு மூளையாகச் செயல்பட்டவராகச் சந்தேகிக்கப்படும் ஜமீஷா முபின், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஐஎஸ் தற்கொலைப் படை வீரர்கள் எப்போதும் செய்வது போல, தன்னைப் பற்றிய வீடியோவை பதிவு செய்தார். ஈஸ்டர் குண்டுவெடிப்பு சமயத்தில் ஹாஷிம் வெளியிட்ட வீடியோவை போலவே இதுவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷாக் வீடியோ
அந்த வீடியோவில் முபின் தான் ஒரு தியாகி ஆக விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர்கள் வெளியிடவே திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், ஏனோ சில காரணங்களால் அவர்கள் அந்த வீடியோவை வெளியிடவில்லை. அவர்கள் ஹாஷிமால் ஈர்க்கப்பட்ட ஒரு ஐஎஸ் பயங்கரவாத குழு போலச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதேநேரம் அவர்களுக்கு வெளியே இருந்து யாராவது உத்தரவுகளைப் பிறப்பித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஎஸ் மாட்யூல்
கோவை கார் வெடிப்பிற்குக் காரணமான ஐஎஸ் மாட்யூலுக்கும், ஜூன் 2019இல் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்த அசாருதீன் தலைமையிலான மற்றொரு மாட்யூலுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் ஹாஷிம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அசாருதீன் ஹாஷிமின் பேஸ்புக் பிரண்ட் ஆவர். அசாருதீன் மாட்யூலில் இருந்த அவரது கூட்டாளி ஒய். ஷீக் ஹிதாயத்துல்லாவும் கோவை கார் வெடிப்பில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாதிகள் கைது
ஹிதாயத்துல்லாவின் சகோதரர் உட்பட மூன்று பேரை ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் 2019இல் கைது செய்தனர். அவர்கள் வழிபாட்டுத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதுவே இரு மாட்யூலுக்கும் இருக்கும் பொதுவான லிங்க் ஆகும். கோவை கார் வெடிப்பு தொடர்பான என்ஐஏ விசாரணை முடியும் தறுவாயில் உள்ளது. கார் வெடிப்பில் முபின் கொல்லப்பட்ட நிலையில், மற்ற 11 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏப்ரல் 21க்கு முன்பு தாக்கல் செய்ய என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 11 பேரும் இப்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.

குற்றப்பத்திரிக்கை
உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 180 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்கள் ஜாமீன் கோரலாம் என்பதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக உபா சட்டத்தில் கைதானவர்கள் மீது 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அதிகாரிகள் கோரிக்கையை ஏற்றது அது 180 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications