அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து பதுங்க மாட்டேன்! எதையும் சந்திக்கத் தயார்! மனம் தளராத ஆ.ராசா!
கோவை: அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து பதுங்க மாட்டேன் என நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா மனம் தளராமல் தெரிவித்துள்ளார்.
எதையும் சந்திக்கத் தயார் என்றும் எந்த சோதனையையும் சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்பேன் எனவும் துணிச்சலாக கூறியுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னர் ஆ.ராசாவின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கிய நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில், ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் எனக் கூறப்படும் கோவை ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அதேபோல் சேலம் கொச்சின் சாலையில் உள்ள நிலம் உட்பட ஆ.ராசாவிற்கு சொந்தமான 15 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த போது ஆ.ராசா பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்து நடத்தி வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது..
இந்த நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பேசிய ஆ.ராசா எம்.பி., கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு சேர்த்ததாக 2023ல் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பெருமை பேசுகிறார் என்றும் 53 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு சேர்த்தவர் கருணாநிதி எனவும் புகழ்ந்து பேசினார்.
2023ல் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு சேர்த்ததில் பெருமை பேச என்ன இருக்கிறது என தாம் பேச முற்பட்ட போது தனக்கு பேச அனுமதி தரப்படவில்லை என்றார். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் 50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார் ஆ.ராசா. அமலாக்கத்துறைக்கு பயந்து பதுங்க மாட்டேன் எனக் கூறியிருப்பதோடு சட்டரீதியாக எதிர்கொள்வேன் எனவும் மனம் தளராமல் கூறியிருக்கிறார். 2ஜி வழக்கை பொறுத்தவரை வழக்கறிஞர் வைக்காமலேயே தாமாக வாதாடி அதிலிருந்து வெளியே வந்தவர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆ.ராசாவை பொறுத்தவரை நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அவரை எதிர்த்து பாஜக நேரடியாக களம் காணவுள்ளதால் அரசியல் ஆடு புலி ஆட்டம் சற்று உக்கிரமடைந்துள்ளது. ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடவுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியிலேயே தொடர்ச்சியாக முகாமிட்டு வருகிறார். நேற்றுக் கூட முதுமலை யானைகள் காப்பகத்திற்கு சென்று எலிபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த தம்பதியிடம் கலந்துரையாடி கவனம் ஈர்த்தார்.












Click it and Unblock the Notifications