கேந்திரிய வித்யாலயால அட்மிஷன் கேட்கும்போது எங்க போச்சு உங்கள் தமிழ் பற்று? நிர்மலா சீதாராமன் நறுக்
கோவை: இந்தி எதிர்ப்புனு சொல்லும் திமுக எம்பிக்கள் என்கிட்ட கேந்திரிய வித்யாலயாவில் சீட்டு கேட்டு சிபாரிசுக்கு வந்தார்களே, அப்போது எங்கே போனது அவர்களது இந்தி ஒழிப்பு பிரச்சாரம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஸ்வகர்மா திட்டம் என்பதற்கு நாங்கள் விளக்கத்தை முன்பே கொடுத்துவிட்டோம். யாராக இருந்தாலும் அவர்கள் கையில் உளியோ சுத்தியோ வைத்துக் கொண்டு பணியாற்றுகிறார்கள் என்றால் அவர்கள் விஷ்வகர்மா. இது ஜாதியுடன் தொடர்புடையது இல்லை.

18 தொழில்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் முடித்திருத்தும் தொழில், கட்டடம் கட்டும் தொழில், படகு தயாரிக்கும் தொழில் செய்வோர் என இருக்கிறார்கள். அந்த தொழிலை செய்வோருக்கு பயிற்சியுடன் ஒரு நாளைக்கு ரூ 500 கொடுக்கிறோம். இது தவிர அவர்களின் தொழில் சார்ந்த கருவிகள் ரூ 15 ஆயிரம் மதிப்பில் கொடுக்கிறோம்.
மத்திய அரசு மூலமாக நல்ல திட்டங்கள் வந்துவிடுகிறதே என ஒவ்வொன்றுக்கும் தடை ஏற்படுத்தி, அதசில் திராவிட அரசியல் கூறும் எதிர்ப்பு இருக்கே! அப்பப்பா! குலத்தொழிலுக்கும், ஜாதிக்கும் இந்திக்கும் மத்திய அரசு எதிரி என்பதை போல் எதிர்க்கிறார்கள்.
தமிழகத்தில் ஜாதி கலவரம் இருக்கிறது. குடிநீரில் மனிதக் கழிவை கலந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா ? என்ன சமத்துவம் பேசுகிறீங்களா, இந்தி வேண்டாம் வேண்டாம்னு இங்க அடித்த அடியில் எங்களை போன்றோர் எல்லாம் இந்தி பேச திணறுகிறோம்.
நான் இந்தி பேசிதான் ஆக வேண்டும் என சொல்லவில்லை. எனக்கு தமிழ் பற்று இன்றும் இருக்கிறது. புறநானூற்றையும் திருக்குறளையும் நான் இன்றும் படித்து வருகிறேன். ஊருக்கு உபதேசம் செய்து கொண்டு நல்ல திட்டங்கள் வந்தால் அதை தமிழக அரசு எதிர்க்கிறது.
ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தொகுதி மக்களுக்காக அட்மிஷனுக்கு ஒவ்வொரு எம்பியும் வந்து என்னிடம் கேட்டார்கள். நானோ அய்யோ நீங்களா, அந்த கட்சியை சேர்ந்தவராயிற்று, கேந்திரிய வித்யாலயாவில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது என முகத்துக்கு நேராகவே நான் கேட்டுள்ளேன்.
திமுகவில் மூத்த நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றுவதற்கு இந்தி ஒழிப்பு, ரயில்வே போர்டில் தாரை போட்டு அடிங்க என்பதா? மணிப்பூர் குறித்தா கேட்கிறீங்க! காங்கிரஸ் ஆட்சியில் மிசோரமில் நடந்த கலவரத்தின் போது ராணுவத்தை அனுப்பி சொந்த மாநில மக்களை கொல்ல செய்தார்கள். இதற்கு முன்னாடி மணிப்பூரில் நடந்த கலவரத்தின் போது எத்தனை மத்திய அமைச்சர்கள் மணிப்பூருக்கு போயிருக்கிறார்கள். இதை காங்கிரஸிடம் கேட்டு வந்து என்னிடம் சொல்லுங்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications