இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. நிர்மலாவின் தலைமை ஏஜெண்ட்டே ஓபிஎஸ்தான்! எகிறி வந்த எடப்பாடி பழனிச்சாமி
கோவை: ஓ.பன்னீர்செல்வம் தான் விரைவில் திகார் ஜெயிலுக்கு போகப் போகிறார், அவர் குடும்பத்தினர் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று நடத்திய அதே நேரத்தில், கோவையில் ஒரு மீட்டிங்கை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக இருந்து எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் கையெழுத்து போட்டுத்தான் ஃபைல்கள் அனைத்தும் போகும். நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் நீ திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன் எனப் பேசினார்.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தென் மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி அதிகனமழை பெய்யும் என கடந்த 14ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அங்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கிறார். மத்திய அரசு நிதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மாநில அரசின் நிதியில் இருந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை மீட்டெடுப்பதுதான் ஒரு நல்ல அரசின் கடமை. ஆனால், மாநில அரசானது, வேண்டுமென்றே மத்திய அரசு மீது குறை சொல்லிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தமிழக அரசு மீது குறை சொல்லிக்கொண்டிருக்கிறது. இது சரியல்ல. மத்திய அரசு பேரிடர் காலங்களில் உடனடியாக தேவையான நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
அந்தந்த அரசியல் சூழலுக்கு தகுந்தவாறு கட்சிகள் கூட்டணி அமைக்கும். அதுபோல பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தோம். தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். சிறுபான்மையினரின் வாக்குகளை ஏமாற்றி திமுக பெற்று வந்தது. அதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். அதை தாங்க முடியாத காரணத்தால் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்." என்றார்.
அப்போது, ஓபிஎஸ் நேற்று பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "திகார் சிறைக்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார். அவர் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். தன் குடும்பத்தினர் பெயரில் நிறைய சொத்துகளை வாங்கி வைத்துள்ளார் ஓபிஎஸ்.
என் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை வாபஸ் பெறாமல் உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று நிரபராதி என நான் நிரூபித்துள்ளேன். நான் முதல்வராக இருந்துள்ளேன். எனக்கு அனைத்துமே தெரியும். என் மீது பழியைப் போட்டுவிட்டு அவர் தப்பிக்க பார்க்கிறார். ஆனால், தப்பிக்க முடியாது.
நாங்கள் எல்லாம் அதிமுகவில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறோம். நான் 1989, 91ல் எம்.எல்.ஏ. 1998ல் எம்.பி. ஓபிஎஸ் இடையில் வந்து சேர்ந்தவர். 2001ல் தான் ஓபிஎஸ் எம்.எல்.ஏவாகவே ஆகிறார். அதுவரை சேர்மன் ஆகத்தான் இருந்தார். ஜெயலலிதா போடிநாயக்கனூரில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு தலைமை ஏஜெண்டாக இருந்தவர்.
அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடன் அளித்ததாக சொல்கிறார். எவ்வளவு மோசமான வார்த்தை அது. வெட்கக்கேடான விஷயம் இல்லையா? இவர்தான் ஜெயலலிதா விசுவாசியாம். ஓபிஎஸ் தரப்பினர் திமுகவின் பி டீம். ஓபிஎஸ் தன்னிடம் உள்ள ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். மக்கள் அதை தெரிந்து கொள்ளட்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications