கோவையில் அரசு வேலைவாய்ப்பு.. 18 ஆயிரம் சம்பளம்.. சமூகநலத் துறையில் பணியாற்ற சூப்பர் சான்ஸ்
கோவை: கோவை மாவட்ட சமூக நலத் துறையில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டரில் கேஸ் பணியாளர், செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் தற்காலிக ஒப்பந்த முறையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. கல்வி, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்காக வெளியே செல்லும் பெண்கள் தங்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் அல்லது வேலை செய்யும் இடங்களில் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது தான் மத்திய அரசின் ஒன் ஸ்டாப் சென்டர் என்ற திட்டம். இத்திட்டமானது பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை, பெண்களை அடித்து துன்புறுத்துதல், கட்டாய கருக்கலைப்பு, கட்டாயத் திருமணம், காதல் பிரச்னைகள், பிளாக் மெயில்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவிகளைச் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையமாகும்.
சமுதாயம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடங்களில் பிரச்னைகளுக்குள்ளாகும் பெண்கள் இந்த ஒன் ஸ்டாப் சென்டர் என்ற மையத்தை 181 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த மையம் பெண்களின் அவசரகால பதில்கள், மருத்துவ உதவி, காவல் துறையில் புகார் அளிக்க உதவுதல், மனநல ஆலோசனை போன்ற பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சமூக நலத் துறையில் ஒன் ஸ்டாப் சென்டரில் தற்காலிக ஒப்பந்தப் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன பணி, கல்வித் தகுதி, சம்பளம் என்ன உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள சமூக நலத் துறையில் கேஸ் பணியாளர் (Case Worker), செக்யூரிட்டி, உதவியாளருக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். மொத்த காலி பணியிடம் ஐந்து உள்ளது. 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கேஸ் பணியாளருக்கு மாதம்தோறும் 18 ஆயிரம் ரூபாயும், செக்யூரிட்டிக்கு மாதம்தோறும் 12 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கேஸ் பணியாளர் பணிக்கு MSW, MA/M.Sc சமூகவியல், MA/M.Sc உளவியல் அல்லது மருத்துவ உளவியல் (பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) படித்து முடித்திருக்க வேண்டும்.
அதேபோல, செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு பாஸ் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்வு அடையாதவர்கள் விண்ணப்பிக்காலம். சமூக நலத் துறையில் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கோவையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஒன் ஸ்டாப் சென்டரில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டியிருக்கும். இப்பணிகளுக்கு 2024 நவம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.coimbatore.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விவரங்களை இந்த இணையதளத்தின் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய கட்டடத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications