ராணுவ வீரர்கள் குறித்து சுந்தரவல்லி சர்ச்சை பதிவு.. கொந்தளிக்கும் பா.ஜ.க. மகளிரணி.. பரபரப்பு புகார்
கோவை: காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட துயரமான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரவல்லி ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துப் பதிவிட்டுள்ளதாகக் கூறி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பஹல்காமில் உள்ள புல்மேடு சுற்றுலாத் தலத்துக்குள் 4 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கியால் சுட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை வேட்டையாடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் பெயர்களைக் கேட்டு இந்துவா என்பதை உறுதி செய்விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சிலரின் மதத்தை உறுதி செய்வதற்காக பேண்ட் ஜிப்பை கழற்ற சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரவல்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில்,"காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பாஜக இதை செய்திருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுந்தரவல்லியின் இந்தப் பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துப் பதிவிட்டுள்ளதாகக் கூறி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில், சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகார் மனுவில், காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் சுந்தரவல்லி, ராணுவத்தினர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும், இந்திய பா.ஜ.க. கட்சியை பற்றியும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், இந்து சமுதாயத்தை பற்றியும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
சுந்தரவல்லியின் இந்தக் கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சுந்தரவல்லி மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications