பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. கார், ஆட்டோ கண்ணாடிகள் சேதம்
கோவை: கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகிகளின் வீடுகளிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காரைக்குடி நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு பங்கேற்றார். இந்த நிலையில் கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது.
இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை, இதனால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கோவை ஒப்பணக்கார தெருவில் உள்ள துணிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இதில் இரு கார், இரு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் மீது வீசிய அதே நபர்கள் நிர்வாகிகளின் வீடுகளின் மீதும் வீசினரா என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.