ஜக்கிக்கு தலைவலி! “பூதாகரம்” எடுத்த சுபஸ்ரீ மரணம்! ஈஷா மைய மர்மங்களை விசாரிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவை: கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்து இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த பழனிகுமார் என்பவரின் மனைவி சுபஸ்ரீ. 34 வயதான இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.
இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக சுபஸ்ரீ ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சி பெற்று இருக்கிறார்.

ஈஷா யோகா மையம்
இவர், கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி காலை மீண்டும் யோகா பயிற்சியில் கலந்துகொள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்று இருக்கிறார் சுபஸ்ரீ. அதன் பின்னர் அங்கு நடைபெற்ற யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு இருக்கும் அவரை பயிற்சி முடிந்த பிறகு அழைத்துச் செல்ல கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையம் வந்து இருக்கிறார்.

சுபஸ்ரீ மாயம்
அனைவரும் பயிற்சி வகுப்பை முடித்து சென்றுவிட்ட நிலையில், தனது மனைவி வெளியில் வராததால் கணவர் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். வரவேற்பு அறையில் உள்ளவரிடம் தனது மனைவி குறித்தும் கூறி உள்ளார். உடனே அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்து உள்ளார். அவர் காலை கால் டாக்ஸியில் ஏறி சென்றது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் புகார்
இது தொடர்பாக கால் டாக்ஸி ஓட்டுநரை விசாரணை செய்து பார்த்தபோது சுபஸ்ரீயை இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டு சென்றது தெரியவந்து இருக்கிறது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியில் பெண் ஒருவர் ஓடிச்செல்வதை போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக பழனிகுமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்.

கிணற்றில் மிதந்த சடலம்
6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் காணாமல்போன சுபஸ்ரீயை தேடி வந்து உள்ளனர். இந்த நிலையில் செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை காவல்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளார்கள். இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டெடுத்தனர்.

உயிரிழந்த சுபஸ்ரீ
உடனே பழனிகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்து பார்த்த அவர், இறந்தது சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்தார். பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில், நுரையீரலில் நீர் இறங்கி உள்ளதாகவும், அவரது உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈஷாவிலிருந்து மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைத்து உள்ளது.

விசாரிக்கக்கோரி முழக்கம்
அடுத்தடுத்து ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் மாவட்ட நிர்வாகம் மற்ரும் காவல்துறையால் மறைக்கப்படுகிறதோ என்கிற ஐயம் எழுவதாம், இந்த விசாரணை விசாரணைக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications