கோவை பாஜக அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சி.. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
கோவை: கோவையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு ஆதி தமிழர் கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கையில் எடுத்து வந்த மாட்டிறைச்சியை பாஜக அலுவலகம் முன்னால் உள்ள சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். பாஜகவின் வானதி சீனிவாசன் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோவில் முன்பு தள்ளுவண்டியில் ஒருவர் மாட்டிறைச்சி பிரியாணி கடை நடத்தி வந்தார். கோவில் முன்பு மாட்டிறைச்சி பிரியாணி விற்க வேண்டாம் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பாஜக நிர்வாகியான சுப்பிரமணியன் என்பவரும் இங்கு கடை நடத்தக்கூடாது என்று அவரை எச்சரித்துள்ளார்.

கோவில் முன்பாகவும், பள்ளிக்கூடங்கள், கல்லூரி முன்பாக இந்த கடையை வைக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக பிரியாணி கடை நடத்தி வந்த பெண்ணுக்கும் பாஜக நிர்வாகி சுப்பிரமணியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரியாணி கடை நடத்தி வருபவர் பாஜக நிர்வாகி மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பாஜக நிர்வாகி சுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதனை கண்டித்து ஊர் மக்கள் சார்பில் போராட்டம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு ஆதி தமிழர் கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆதி தமிழர் கட்சியினர் வீசிய மாட்டிறைச்சி சாலையில் விழுந்தது.

பாஜக மாவட்ட அலுவலகம் மீது மாட்டிறைச்சியை வீச முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அங்கு நின்ற போலீசார் மாட்டிறைச்சி வீச முயன்ற 5 பேரையும் கைது செய்தனர். ஆனால் அவர்கள் கைதை கண்டித்து சாலையில் படுத்து போராட்டம் செய்தனர். எனினும் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அநாகரீக செயலை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
"தமிழக பாஜக இன்று கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மாட்டிறைச்சி வீசுவதற்கு முயன்ற நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது. அநாகரிகமான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இம்மாதிரியான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications