கோவையே கொந்தளிச்சு போய் கெடக்கு.. பிஎஸ்ஜி கல்லூரி மாணவி மர்ம மரணம்! புகாரை அடுக்கும் பெற்றோர்!
கோவை: கோவை மாவட்டத்தில் பீளமேடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மயக்கவியல் மருத்துவ மாணவி பணியின் போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவே மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதிகாலையில் தான் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், மாலையில் கோவைக்கு வந்த அவர்களிடம் கையெழுத்து போட்டால் தான் மாணவியின் உடலை காட்டுவோம் என கல்லூரி நிர்வாக விரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகள் பவபூரணி. இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவமனையான பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு முதுநிலை மயக்கவியல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
கல்லூரியில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் நேற்று இரவு வழக்கமாக இரவு பணியில் இருந்த பவபூரணி, மருத்துவமனையில் உள்ள அவரது அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக இன்று காலை அவரது பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர்.

இரவு உணவு உட்கொண்ட நிலையில் அவர் மயக்கம் அடைந்ததாகவும் உயிரிழப்பிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் அஜாக்கிரதையாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு எந்தவித தகவலும் அளிக்காமல் மாணவி அணிந்திருந்த அணிகலன்கள் மற்றும் உடமைகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் மாலையில் மருத்துவமனைக்கு வந்த மாணவியின் பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டு மாணவியை பார்க்குமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். முதுநிலை மருத்துவர்களோ மருத்துவமனை அதிகாரிகளோ யாரும் பேசாத நிலையில் செவிலியர் ஒருவர் மட்டும் வந்து கையெழுத்திட்டு உடலை காணுமாறு கூறியதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய காரணம் என்னவென்று அவர்கள் கூற மறுப்பதாகவும் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். முதுநிலை மருத்துவ மாணவிக்கு தனி அறை ஒதுக்கப்பட்ட சூழலில் மாணவி தங்கி இருந்த தனி அறையை உடைத்து அவரது உடைமைகளை எதற்காக எடுத்தார்கள்? பெற்றோரிடம் எந்த தகவலும் கூறாமல் அவற்றை காவல் நிலையத்தில் எதற்காக ஒப்படைத்தார்கள்? என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் தெரியாமல் உடலை பெற மாட்டோம் என்றும் அதுவரை இங்கேயே காத்திருப்போம் எனவும் தற்போது வரை மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் வந்து பேசாதது ஏன் எனவும் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளதோடு, போராட்டத்திலும் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். இளநிலை மருத்துவ படிப்பு மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் படித்த நிலையில் முதுநிலை மயக்கவியல் படிப்புக்காக கடந்த மே மாதம் தான் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவி சேர்ந்துள்ளார்.
அடுத்த கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் ஆறு லட்சம் ரூபாயையும் தற்போதே கல்லூரி நிர்வாகம் வசூலித்து விட்டதாகவும் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ள நிலையில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பீளமேடு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications