''செந்தில்பாலாஜியால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வரும்''! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி திடீர் ஆவேசம்!
கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜியால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடும் என எச்சரித்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
டாஸ்மாக் விவகாரத்தில் மதுபான கொள்முதல் முதல் காலிபாட்டில் வரை ஊழல் செய்துகொண்டு எதுவுமே நடக்காதது போல் செந்தில்பாலாஜி இருந்து வருவதாகவும் அவரை முதல்வர் பதவி நீக்க வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 22 மாதங்களாக டாஸ்மாக் கடைகளில் கரூர் பார்ட்டிகள் வசூல் செய்து அட்டூழியம் புரிவதாகவும் அண்ணன் அனுப்பிவிட்டார் எனக் கூறி செந்தில்பாலாஜியின் பெயரை பயன்படுத்தி அவர்கள் வசூல் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். இதேபோல் சட்டவிரோத மதுபான பார்கள் மூலமும் அமைச்சர் செந்தில்பாலாஜி வருவாய் பார்ப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்களை கொண்டு செல்லும் வாகனங்களின் வாடகை தொகை மாற்றப்பட்டதில் அமைச்சர் செந்தில்பாலாஜி தன்னிச்சையாக முடிவெடுத்து கிலோமீட்டருக்கு 8 ரூபாய் என்றிருந்ததை 15 ரூபாயாக மாற்றியதாக குற்றஞ்சாட்டினார்.
இதனால் தான் அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என தாம் கூறுவதாகவும் ஆளுநரிடமும் இது குறித்து ஆதாரபூர்வமாக தாம் புகார் அளித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். மின் துறையில் நிகழ்ந்துள்ள ஊழல் காரணமாகவே மின் கட்டண உயர்வை கொண்டுவருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கிக் கொண்டே சென்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications