இனி சொகுசா பயணிக்கலாம்.. கோவைக்கு வந்தாச்சு லோ ப்ளோர் பஸ்.. இதுல இவ்வளவு வசதிகளா
கோவை: கோவையில் அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட 25 புதிய லோ ப்ளோர் பஸ் எனும் தாழ்தளப் பேருந்துகளை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்துள்ளார். கோவையில் இயக்கப்படவுள்ள இந்தப் பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் பேருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும், வார இறுதி நாள்களிலும், தொடர் விடுமுறை நாள்களிலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் முன்பைவிட அதிக அளவில் அரசு விரைவுப் பேருந்துகளை பயன்படுத்துவதால்,பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு புதிய பேருந்துகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஏராளமான பேருந்துகளும் வாங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்தளப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டன. ஆனால், மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
கோவையிலும் இதே கோரிக்கை நீண்ட நாள்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை கடந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த தாழ்தள பேருந்துகளில் இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ. குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
அதேபோல, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி, மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கோவைக்கு 100 தாழ்தள பேருந்துகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், 24 பேருந்துகள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த 24 தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து மாநகருக்குச் செல்வதற்கான சிறப்பு பேருந்துகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தப் புதிய பேருந்துகள் கருமத்தம்பட்டியில் இருந்து பல்வேறு மார்க்கமாக கோவை மாநகருக்கு செல்கிறது.
90 ஏ வழித்தட எண் பேருந்து உக்கடம் - சோமனுர் வழியாகவும், 90/90A வழித்தட எண் பேருந்து உக்கடம் - தமிழ்நாடு பொறியியல் கல்லூரி வழியாகவும், 20A பேருந்து காந்திபுரம் -சோமனுர் வழியாகவும், 40A/20A பேருந்து காந்திபுரம் - சோமனுர் வழியாகவும், 111, 111A காந்திபுரம் - துடியலூர் வழியாகவும், 96 பேருந்து காந்திபுரம் - வாளையார் வழியாகவும், 48, 48A வழித்தட பேருந்துகள் காந்திபுரம் - வேலந்தாவளம் வழியாகவும் இயக்கப்படவுள்ளன.
தாழ்தள சொகுசுப் பேருந்துகளின் சிறப்பு அம்சங்கள்: பேருந்துவின் தளம் தரைத்தளத்தில் இருந்து 300 மில்லி மீட்டர் உயரம் மட்டுமே உள்ளது. எனவே, இப்பேருந்தில் அனைத்து வயது மகளிர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக ஏறி இறங்கி பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேருந்துவின் முன் மற்றும் பின்புற அச்சு ஆகிய இரு பகுதிகளிலும் Air Suspension System பொருத்தப்பட்டுள்ளதால் பேருந்து மிதவை பேருந்தாக செயல்படும். பயணிகள் இறங்கும் இடத்தை அறியும் வகையில் முன் கூட்டியே ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்தின் கதவுகள் மூடிய நிலையில் இருந்தால் மட்டுமே பேருந்து நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் எவ்வித சோர்வும் ஆகாத வகையில் கியர் மாற்றம் இல்லாத (Auto Gear Shifting) பேருந்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக Wheel Chair -உடன் ஏறி இறங்கும் வகையில் Ramp வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் Wheel Chair உடன் பயணம் செய்யும் பொழுது Wheel Chair Lock செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications