அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் குறித்த கேள்வி.. சிரித்தபடியே சம்பவம் செய்த செந்தில் பாலாஜி
கோவை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனக்கு தானே சாட்டையடி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்தபடியே தக் லைஃபாக பதில் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் அமைக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அந்தப் பகுதி மக்களுக்கு அவர் பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்தார்.

அதன் பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோவை மாநகராட்சி பகுதியில் மட்டுமே இன்று ரூ.30.93 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை புதிய தார் சாலைகள் அமைப்பதற்காக 860 கி.மீ சாலைகளுக்கு ரூ.415 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலைகள் அமைப்பதற்காக கூடுதலாக ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.100 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல மீதமுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சாலை பணிகளுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சி வரலாற்றில் சாலைகள் பணிகளுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
திமுகவின் மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அவிநாசி சாலை மேம்பாலம் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. அதேநேரத்தில் அந்தப் பகுதி தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அவிநாசி சாலை மேம்பாலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் பாலம் நீட்டிப்பு பணிகள் தொடங்கும்.
சாலை பணிகள், மேம்பாலம் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி என்ற பாரபட்சம் இல்லாமல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, நம் முதலமைச்சர் அந்த திட்டங்களை அறிவித்தது நிதியை ஒதுக்கிவிட்டார். கோவை மாவட்டத்துக்கு முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார்.
கோவை மாவட்டத்துக்காக ஏராளமான திட்டங்களை அறிவிப்பதுடன் அந்த திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். முதலமைச்சர் சமீபத்தில் ஈரோடு மாவட்டத்துக்கு ஆய்வு பணிக்காக கோவை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது விமான நிலையத்திலேயே மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தி பணிகளை விரைவுபடுத்த சொல்லி உத்தரவிட்டார்." என்றார்.
அப்போது செய்தியாளர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, "இன்று ஞாயிற்றுக்கிழமை. உங்களுக்கு வேலை இருக்கா.. இல்லையா.." என சிரித்தபடியே பதில் சொல்லி சென்றார்.












Click it and Unblock the Notifications