அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் நிலைமை அரசியலில் அதிகரித்துவிட்டது.. குட்டிக்கதை சொன்ன எடப்பாடி
கோவை: கோவையில் நடந்த கிறிஸ்தவர் மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி குட்டிக்கதை ஒன்றையும் சொன்னார். அதில், அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் நிலைமை அரசியலில் அதிகரித்துவிட்டது என்று கூறினார்.
கோவை கருமத்தம்பட்டியில் இன்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் முப்பெரும் விழா இன்று நடந்தது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி ஒரு குட்டிக்கதையும் கூறினார். அவர் கூறியதாவது:-

ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் வெறும் தந்திரசாலி, தீயவன். இளைய மகன் மிகவும் அப்பாவி, நல்லவன். ஒவ்வொரு நாள் காலையிலும் தந்தை தன் இரு மகன்களையும் அழைத்து வயலுக்கு சென்று விவசாயக வேலைகளை செய்து வருமாறு அனுப்பி வைப்பது வழக்கம். மகன்களை அனுப்பி வைத்த பிறகு தந்தை நெல் மண்டியை கவனிக்க சென்று விடுவார்.
ஏமாற்றி விட்டு: அப்பாவியான இளைய மகனோ தந்தை கூறியபடியே வயலுக்கு சென்று கடினமாக உழைத்து வேலைகளை முடித்துவிட்டு மாலை நேரத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவார். ஆனால் மூத்த மகன் தந்திரசாலியோ தன் தம்பியிடம் எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் என் வேலையையும் சேர்த்து நீயே பார்த்துவிடு என்று அன்பாய் கூறுவது போல் ஏமாற்றி விட்டு நண்பர்களுடன் சேர்ந்து தீய செயலில் ஈடுபடுவார்.
மாலை நேரம் ஆனதும் பகல் முழுவதும் வேலை பார்த்தது போல தந்தையை நம்ப வைப்பதற்காக சேறு சகதியினை உடல் முழுவதும் பூசிவிட்டு வீடு திரும்புவார். இதை தினசரி கவனிக்கும் தந்தை மூத்த மகன் தான் கஷ்டப்பட்டு வேலை செய்து குடும்பத்திற்காக உழைக்கிறான் என்று நம்பி வந்தார். இதேபோல் இளைய மகன் நாம் சொல்வதை கேட்காமல் குடும்ப முன்னேற்றத்திற்கு எதிராக இருக்கிறான் என்று நம்பினார்.
வேலை பார்க்க முடியாத நிலை: இதனால் பண்டிகை நாட்களில் மூத்த மகனுக்கே பணத்தை வாரி வழங்குவார். இளைய மகனுக்கு குறைவாக தான் கொடுப்பார். ஆனால் இளைய மகன் அப்பா மீது கோபப்படாமல் பொறுமையாக பாசத்தோடு நடந்து வந்தான். என்றாவது ஒரு நாள் அப்பாவுக்கு உண்மை தெரியவரும் என்று அவன் வேலையை தொடர்ந்து செய்து வந்தான். இந்த நிலையில் ஒருநாள் வயலில் வேலை பார்த்த சமயத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இளைய மகனால் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.
ஒரு சில மாதங்கள் வயலுக்கு சென்று வேலை பார்க்க முடியவில்லை. இதனால் வயலில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், உரம் போடுவது, தண்ணீர் பாய்ப்பது போன்ற அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டன. இதனால் மூத்த மகன் வயலில் வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டது. எனவே மூத்த மகன் வயலுக்கு சென்று அன்றாடம் உழைக்கு நிலை ஏற்பட்டது. ஆனால் மூத்த மகனுக்கு இதுவரை வயலுக்கு சென்று விவசாய பணிகளை மெற்கொண்ட அனுபவம் இல்லை.
அடுத்தவர் முதுகில் சவாரி: அனுபவம் இல்லாததால் அந்த பருவத்தில் விளைச்சல் குறைந்துவிட்டது. அப்போதுதான் இளைய மகனின் உண்மையான உழைப்பும் மூத்த மகன் சோம்பேறியாக தன்னை ஏமாற்றி வந்ததும் உண்மை தந்தைக்கு புரிந்தது. உண்மை புரிந்த உடன் இளைய மகன் மீது அதிக பாசத்தை பொழிந்தார் தந்தை. அத்துடன் மூத்த மகனுக்கு அறிவுரைகள் வழங்கி திருத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.
இன்றைய உலகத்தில் பெரும்பாலானோர் இப்படித்தான் உள்ளனர். அரசியலிலும் இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஒருவர் உழைப்பால் மற்றொருவர் வாழ்வதும், அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யும் நிலமையும் அதிகரித்து விட்டது. தமிழகத்திற்கு நல்லது செய்வோம்.. உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications