ரெய்டுக்கு பின் முதல் முறையாக மனம் திறந்த எஸ்பி வேலுமணி.. போட்ட அதிரடி ட்வீட்
கோவை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சட்டசபை அதிமுக கொறடாவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ்பி வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் சோதனை நடந்தது.
சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் 13 லட்சம் ரூபாய் பணம் , மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்பட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை கூறியிருந்தது.

ரெய்டுக்கு எதிர்ப்பு
லஞ்ச ஒழிப்பு துறை ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியது. அதனை தொடர்ந்து எஸ்பி வேலுமணி வீட்டிலும் ரெய்டு நடத்தியதால் அதிமுக தலைமை கடும் கோபம் அடைந்தது. திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

ரெய்டு ஏன்
அந்த அறிக்கையில் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்களைக் குறி வைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. S.P. வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒருசிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், திமுக அரசு கழகத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறேதா என்ற ஐயப்பாடும், வருத்தமும் மனதில் எழுகின்றன.

சட்ட ரீதியாக சந்திப்போம்
துடிப்பான கழக செயல்வீரர் S.P. வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம். கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க, கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும், முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.

மக்கள் பணி
இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று. அனைத்திந்திய அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும். அன்பு வழியிலும், அற வழியிலும் அரசியல் தொண்டாற்றும்" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கையில் கூறியிருந்தனர்.

ரெய்டுக்கு எதிர்ப்பு
இதனிடையே கோவை திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் பலர் நேற்று எஸ்பி வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவை மாநகரம் முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. ரெய்டு முடிந்த பின்னரே கூட்டம் அங்கிருந்து கலைந்தது

ஓபிஎஸ் இபிஎஸ்க்கு நன்றி
இந்நிலையில் ரெய்டு தொடர்பாக முதல்முறையாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ட்வீட் போட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications