கோவை மக்களே அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அருமையான வாய்ப்பு
கோவை: அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் கால அவகாசம் நடப்பு மாதத்துடன் முடியும் நிலையில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திட சிறப்பு முகாம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் கால அவகாசம் நடப்பு மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, பொதுமக்கள், 20-10-2016-க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, கோவை மாநகராட்சி மூலம் வருகிற 11-ந் தேதி மற்றும் 18-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது மேற்கண்ட தேதிகளில் நடக்க இருந்த சிறப்பு முகாம்கள் நிர்வாக காரணங்களால் வருகிற 18-ந் தேதி, 25-ந் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு முகாம்கள் மண்டல அலுவலகங்களில் நடக்க இருப்பதால், பொதுமக்கள் தங்களின் மனை ஆவணம், வரைபடம் மற்றும் வங்கி கணக்கில் இருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500, ஆன்லைனில் செலுத்தி உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து பயனடையலாம்.
மேலும் தங்கள் பகுதியில் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரைபடங்களை வரன்முறைப்படுத்திட பிரதான அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் வருகிற 23-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேற்கண்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மாநகராட்சி மூலமாக வரன்முறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மனை வரன்முறைக்கு என்னென்ன தேவை? என்பதை இப்போது பார்ப்போம். பட்டா மற்றும் புல அளவை சுவடியில் உள்ளது போன்ற, மனை பரிமானம் அல்லது மனை உட்பிரிவு மற்றும் தொடர்புடைய சாலையின் அகலம் ஆகிய விபரங்களுடன், அங்கீகாரம் பெற்ற நில அளவையர் அல்லது கட்டட விதிகளில் குறிப்பிட்டுள்ள தொழில் சார்ந்த வல்லுனர்கள் கையொப்பமிட்ட, தளவரைபடத்தை காட்டும் வரைபட நகல்கள் மூன்றினை மனையின் உரிமையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் வரன்முறை கோரும் மனையின் மனை பரிமாணம், சாலை வலையமைப்பு, அகலம், பொது திறந்தவெளியின் பரிமாணம், பொது பயன்பாட்டு மனைகள், மனைப்பிரிவு அமைந்துள்ள கிராமத்தின் நிலஅளவை எண்கள் ஆகியவை அடங்கிய மனைப்பிரிவு வரைபடத்தின் நகலை அளிக்க வேண்டும்.
மனைப்பிரிவு அமைந்துள்ள பகுதியின் சுற்றுப்புறங்களில் உள்ள வளர்ச்சி மற்றும் இணைப்பு சாலைகளை காட்டும் வரைபடத்தின் நகல், சுயசான்று அளிக்கப்பட்ட மனையின் விற்பனை ஆவணம் அல்லது உரிமை ஒப்பாவணம்.விண்ணப்பதாரர் பெயரில் பெறப்பட்ட பட்டா, நிரந்தர நில பதிவுரு அல்லது நகர நிலஅளவை பதிவேடுகளின் நகல், விண்ணப்பதாரர் பெயரில் பெறாமல் இருப்பின், முந்தைய நில உரிமையாளர் பெயரில் அவ்வாவண நகல்கள் இணைத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் நாளில் இருந்து, அதற்கு முன் ஒரு வாரத்துக்குள் பத்திரப்பதிவு துறையில் பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும். மனைப்பகுதி விவசாய நிலத்தில் அமைந்திருந்தால், பொது நீர்ப்பாசன வாய்க்கால்களை தடை செய்யாமல் அம்மனைப்பிரிவு உள்ளது என்பதற்கும், வெள்ளப்பெருக்கம் தாக்கத்தின் அளவு ஆகியவை குறித்தும் தாசில்தார்களிடம் பெற்ற சான்றிதழ் அல்லது அதன் நிலை குறித்த அறிக்கையை மனை உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications