கோவையில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்த அண்ணாமலை.. உற்று கவனித்த பொதுமக்கள்! என்ன சொன்னார் பாருங்க
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடும் நிலையில், அங்க அவர் வடமாநில மக்களுக்குப் புரியும் வகையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்தார்.
இந்த முறை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19இல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இன்னும் 2 வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இப்போது பல முனை போட்டி நிலவுகிறது.
பிரச்சாரம்: தமிழ்நாட்டில் திமுக தனது தலைமையில் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கூட்டணி ஆகியவையும் களத்தில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த பாஜக, இந்த முறை தனது தலைமையில் தனியாகக் கூட்டணியை உருவாக்கி உள்ளது.. பாஜகவின் இந்த கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் தரப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
பாஜக இந்த முறை லோக்சா தேர்தலில் மொத்தம் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த முறை தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே பல வலுவான வேட்பாளர்களையும் பாஜக களத்தில் இறக்கி உள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் எனப் பல முக்கிய தலைவர்களை பாஜக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
அண்ணாமலை: அதன்படி தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுக்க பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அண்ணாமலை இடையில் தனது கோவை தொகுதியிலும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன்படி நேற்றைய தினம் அண்ணாமலை கோவையில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.
இந்தியில் பேசிய அண்ணாமலை: அண்ணாமலை பிரச்சாரத்தைக் கேட்கக் கோவை தெப்பக்குளம் பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது அங்கே இந்தி பேசும் மக்களும் கணிசமாக வந்திருந்தனர். அவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக இந்தியில் பேசினார். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பொதுமக்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அண்ணாமலை இந்தியில் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கோவை: கோவை தொகுதியில் இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது. திமுக போன முறை கோவையைக் கூட்டணிக்கு ஒதுக்கி இருந்த நிலையில், இந்த முறை நேரடியாகக் களமிறங்குகிறது.. திமுக சார்பில் கணபதி பி. ராஜ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து சிங்கை ஜி.ராமச்சந்திரன் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து கலாமணி போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் பாஜகவில் இருந்து அண்ணாமலையும் களத்தில் இருக்கிறார்.











Click it and Unblock the Notifications