ஒரே மாவு.. ஒரே மாஸ்டர்! ஜிஎஸ்டி மட்டும் வேற.. முடியல மேடம்! நிதியமைச்சர் நிர்மலாவிடம் புலம்பிய ஓனர்!
கோவை: கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினர். நிலையில், உணவகங்களில் உணவுப்பொருட்கள், இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றிற்கு வெவ்வேறு மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பை சுட்டிக்காட்டும் விதத்தில் கோவை அன்னபூர்ணா உணவக குழும தலைவர் சீனிவாசன், குடும்பமாக வந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம் என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆலோசணை நடத்தினார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி அமர்ந்த பிறகு தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவக குழும தலைவருமான சீனிவாசன், கடந்த காலங்களில் வங்கி கடன் பெறுவதற்கு ஆறு மாத காலம் அலைய வேண்டி இருந்ததாகவும், ஆனால் தற்போது வங்கியாளர்கள் தங்களை துரத்துகின்றனர் எண்ணற்ற சேவைகள் வங்கிகள் மூலமாக வழங்கப்படுவது உண்மையிலேயே சிறப்பான ஒன்று என பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,” உங்க பக்கத்துல இருக்கிற எம்எல்ஏ ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க.ஸ்வீட்டுக்கு ஐந்து சதவிகிதம். உணவுக்கு 5%. காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை.. ஆனால் உள்ள வைக்குற கீரீம்கு ஜிஎஸ்டி இருக்கு.
அவங்க வர்றாங்க.. ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி காரம் சாப்பிடுவது, அப்புறம் காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என்பது தினசரி நடக்கின்றது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பண்ணுக்கு ஜிஎஸ்டி கிடையாது அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி. இதை காணும் வாடிக்கையாளர்கள் ஜாமையும் கொடுத்துவிடு நானே வைத்துக் கொள்கிறேன் என்கிறார்கள். கடை நடத்த முடியவில்லை மேடம்.
இது மட்டுமின்றி எம்எல்ஏ வடமாநிலத்தில் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் இனிப்புக்கு குறைவாக ஜிஎஸ்டியும் காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன்,” மாநில வாரியாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு இல்லைங்க” என்றார். தொடர்ந்து பேசிய சீனிவாசன், ஜிஎஸ்டி அதிகாரிகள் இன்புட் கிரெடிட் எடுக்கும் பொழுது அதே கிச்சன், அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது அதிகாரிகளே திணறுகிறார்கள். அவர்களுக்கும் உதவி பண்ணுங்க . வருடத்தில் ஏதாவது ஒரு நாள் தான் ஹோட்டல்களில் ஒரு அறைக்கு 7500 என பில் போடுகிறோம். அதுவும் தற்போது ஹோட்டல்களின் அரை கட்டணங்களை மேக் மை ட்ரிப் தான் நிர்ணயிக்கிறது.
ஒரு நாள் 7500 பில் போட்டதற்கு ஆண்டு முழுவதும் 18 சதவீதம் ஜிஎஸ்டி போடுகிறார்கள். ஒரு மாலில் யாரோ ஒருவர் ஹோட்டல் நடத்துகிறார். அதனால் அங்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைவருக்கும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருகிலேயே சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அமர்ந்திருந்த நிலையில் மேடைக்கு கீழே கோவை தொழில் மற்றும் வர்த்தக சபை நிர்வாகிகள் தொழில் முனைவோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்த வேளையில் கோவைக்கே உரிய நகைச்சுவையுடன் அன்னபூர்ணா உணவகக் குழும உரிமையாளர் சீனிவாசன் பேச்சுக்கு அனைவரும் கைத்தட்டி வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications