சரக்கில் ‘கிக்’ இல்லை.. அமைச்சர் சொன்னா சரியா தான் இருக்கும்! அவரே ஒத்துக்கிட்டாரு..அண்ணாமலை அட்டாக்
கோவை: டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை’என நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய நிலையில், "டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, கிக் இல்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நேற்று தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,”உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் 'கிக்' இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்’ என பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக டிடிவி தினகரன், விகே சசிகலா, தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் "டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, கிக் இல்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை அவினாசி சாலை முதலிபாளையம் பகுதியில் பாஜக கோவை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,” சுதந்திரமாக இயங்கக்கூடிய சிஏஜி மாநில அரசு இயங்கக்கூடிய டாஸ்மாக் நிறுவனம் எப்படி இயங்குகிறது. அதன் வெளிப்படைத்தன்மை அதன் கணக்கு வழக்கு முறை எந்த அளவிற்கு வெளிப்படுத்தன்மையாக உள்ளது என்பது குறித்து சிஏஜி எப்போதுமே தணிக்கை செய்வார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை தணிக்கை செய்த அவர்கள் மேலோட்டமாக கணக்கு வழக்குகளில் படைத்தன்மையாக இல்லை எனக் கூறி இருக்கிறார்கள். டாஸ்மாக் நிறுவனத்தில் ஆண்டறிக்கையை கஷ்டப்பட்டு தெரிந்தால் மட்டுமே கிடைக்கும். தமிழக அரசு டாஸ்மாக்கை பொறுத்தவரை அங்குள்ள பல விஷயங்களை மறைக்க வேண்டும் என நினைக்கிறது.
நீர்வளத்துறை துரைமுருகன் அண்ணன் சொன்னதை காமெடியாக சொன்னாலும்.. நான் கள்ளக்குறிச்சிக்கு போகும் போது எங்களிடம் சிலர் சொன்னார்கள்.. உண்மையில் கள்ளக்குறிச்சியிலும் சொன்னார்கள். இன்று டாஸ்மாக்கின் தரம் தண்ணீரை போன்று விற்கிறார்கள் என்று கூறினார்கள். அதில் தரம் இல்லை யாரும் சென்று ஆய்வு நடத்துவது இல்லை. போதை அதிகமாக வேண்டும் என்பதற்காக தான் கள்ளச்சாராயம் அபின் மற்றும் கஞ்சாவை நோக்கி சென்று இருக்கிறார்கள் என்று கள்ளக்குறிச்சியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.
திமுகவை சார்ந்த எந்த புள்ளி டாஸ்மார்க் எந்த நிறுவனத்தின் மூலம் எவ்வளவு கொடுக்கிறார்கள் அந்த நிறுவனத்தை ஆடிட் செய்தார்களா? சோதனை செய்தார்களா தரம் சோதனை செய்தார்களா என்றால் இல்லை. டாஸ்மாக் குடிமக்களை அடிமையாக்குகிறது ஒரு பக்கம். துரைமுருகன் நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும் அது உண்மை. டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, கிக் இல்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.
சிஸ்டத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை அவரை ஒப்புக் கொண்டுள்ளார். அரசு தவறாக வேலை செய்கிறது என்று நகைச்சுவையாக அவர் சொன்னார் என்கிறார்கள். ஆனால் இதை நகைச்சுவையாக கடந்து செல்லக் கூடாது. உதாரணமாக ஈஷா விவகாரத்தை எடுத்துக் கொண்டால் ஈஷாவை யானை வழித்தடம் என்று சொல்வார்கள்.. வனத்துறை அமைச்சர் 3 வருடமாக கண்டுபிடிக்கவில்லையா? என துரைமுருகன் என்று கேட்கிறார். அண்மைக்காலமாக சட்டமன்றத்தை பார்க்கும் பொழுது அமைச்சரவைகள் இருக்கும் பிரச்சனைகள் சட்டமன்றத்தில் வெளிப்படையாக தெரிவதாக தான் பார்க்கிறேன்” என கூறினார்.












Click it and Unblock the Notifications