"என் வேலை போகோணும்னா உள்ள போங்க!" டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு லேட்டா வந்த மாணவியிடம் கும்பிட்ட போலீஸ்
கோவை: என் வேலை போகணும்னா உள்ள போங்க என டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவியிடம் கையெடுத்து கும்பிட்டார் போலீஸ்காரர் ஒருவர். இந்த சம்பவம் கோவையில் ஒரு மையத்தில் நடந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 08/2024, நாள்: 20.06.2024 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி-II & II A பணிகள்)- இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR முறை) முதனிலைத் தேர்வு வரும் இன்று நடந்தது.

இத்தேர்வினை 7,93,966 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் எழுதினர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும்
செயல்படுவார்கள்.
தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டார்.
தேர்வு தொடர்பான மந்தண பொருட்கள் உரிய முறையில் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 2,763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து மையத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ
வசதிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். மாறாக வேறெந்த ஆவணமும் அனுமதிக்கப்படாது என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் தேர்வு 9 மணிக்கு தொடங்கியது. அப்போது கோவையில் ஒரு மையத்திற்கு தனது தந்தையுடன் மாணவி ஒருவர் 9.10 மணிக்கு வந்தார். அவர் வந்த போது கதவு மூடப்பட்டுவிட்டது. உடனே அங்கிருந்த போலீஸாரிடம் தன்னை உள்ளே அனுப்புமாறு கேட்டார்.
அதற்கு அவர் நேரமாகிவிட்டது. 9 மணிக்கு மேல் வருவோரை அனுப்பவே கூடாது என தெரிவித்துள்ளனர் என்றார். அதற்கு அந்த மாணவி , போலீஸ்காரரிடம் கெஞ்சி கேட்கிறார். அப்போது அவர் இரு கைகளை கூப்பி, நேரம் தவறி வந்த உங்களை உள்ளே அனுப்பினால் என் வேலை போய்விடும்.
என் வேலை போகணும்னா நீங்கள் உள்ள போங்க என தெரிவித்தார். உடனே அந்த மாணவி செய்தறியாமல் நின்றுவிட்டார். பிறகு அவருடைய தந்தையும் , "சார் வேறு ஸ்கூலுக்கு போய்விட்டு இங்கு வந்துள்ளோம். 9.10 தானே ஆகிறது. அனுப்புங்கள்" என கேட்டார். ஆனாலும் அந்த மாணவி உள்ளே அனுப்பப்படவில்லை. அரசு வேலை கனவுகளுடன் ஆசையாக வந்த அந்த மாணவி கனவு கலைந்ததை அடுத்து வேதனையுடன் சென்றார்.












Click it and Unblock the Notifications