வாக்கு இயந்திரங்கள் அறைக்கு சரியாக "சீல்" வைக்கல.. கோவையில் பகீர் கிளப்பிய தவெக வேட்பாளர்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்று வாக்கு சதவீதத்துடன் முடிந்துள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை சரியாக சீல் வைக்கவில்லை என்று வால்பாறை தவெக வேட்பாளர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.
கோவை வால்பாறை தொகுதி தவெக வேட்பாளர் ஶ்ரீதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இவிஎம் மெஷின், விவிபேட் இயந்திரங்களை அனைத்து கட்சி ஏஜென்ட்கள் முன்னிலையில் சீல் வைப்பார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான இயந்திரங்களையும், கோவை தொழில்நுட்ப கல்லூரியில் வைத்துள்ளனர். வால்பாறை தொகுதிக்கான இயந்திரங்களையும் அங்கு தான் வைத்துள்ளனர். தேர்தல் ஆணைய விதிகள்படி, வேட்பாளர் அல்லது பூத் ஏஜென்ட் அதை பார்வையிடலாம்.

கதவு சரியாக சீல் வைக்கவில்லை
வால்பாறை இயந்திரங்கள் வைத்துள்ள அறையின் கதவு சரியாக சீல் வைக்கப்படவில்லை. அது சாலையை ஒட்டியுள்ளது. அங்கு 2 காவலர்கள் தான் பாதுகாப்பில் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடால் வாக்கு எண்ணுவதற்குள் ஏதவாது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து நான் வால்பாறை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தேன்.
பொதுவாக இதுபோன்ற புகார்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனைத்து கட்சி வேட்பாளர்கள், பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் கதவை சரியாக பூட்டி சீல் வைக்க வேண்டும். ஆனால் என்னுடைய புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். ஆட்சியர் உதவியாளர் இது பெரிய பிரச்சனையில்லை என்கிறார்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை இல்லை
வேட்பாளர் ஒரு குறை சொல்லும்போது அதை நிவர்த்தி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை. தொகுதி பார்வையாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எங்கள் கட்சி தலைமையிடம் பேசி, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் கொடுத்துள்ளேன்.
இப்போதுவரை அந்த கதவு சரியாக பூட்டி சீல் வைக்கவில்லை. வால்பாறை தொகுதியில் உள்ள 1,72,000 மொத்த வாக்கில் 1,49,000 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் கடமை. வேட்பாளர் என்ற அடிப்படையில் பாதுகாப்பை நான் சுட்டி காட்டியுள்ளேன். மக்கள் உரிமை, சொத்தை தேர்தல் ஆணையம் அந்த கதவை சரியாக பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications