கோவை மெட்ரோ திட்டம்.. என்னதான் ஆச்சு.. தமிழக முதல்வருக்கு முக்கிய கோரிக்கை வைத்த வானதி
கோவை: கோவை மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் முதல்வர் முக ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் பெரிய தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு ஐடி பூங்காக்கள், தொழிற்சாலைகள், பெரும் கல்வி நிறுவனங்கள், விவசாயம் என அனைத்து வளங்களும் பெற்ற மாவட்டமாக உள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்தும் கோவையில் தொழில் தொடங்க பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வசித்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கோவை மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாறு மாவட்டத்துக்கு வருகை புரியும் மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது பேருந்து போக்குவரத்து. மாவட்டத்தில் முக்கியப் பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
இதனால், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரது நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்திற்குத் தேவையான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து கோவை மெட்ரோ திட்டத்தினை விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மக்கள்தொகை அதிகரிப்பினாலும், வாகன நெரிசலாலும் நகரத்தின் முன்னேற்றத்திற்காகவும் கோயம்புத்தூரில் மெட்ரோ திட்டம் நடைமுறைக்கு வருவது மிகவும் அவசியமானது. எனினும், கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரும் மெட்ரோ திட்ட நடைமுறையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்பிக்காததே தாமத்திற்கு காரணம் என தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
எனவே, கோவை நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்து, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications