“மலை ஏறாதீர்கள்” என எச்சரித்தும் சென்ற பக்தர் பலி.. வெள்ளியங்கிரியில் மீண்டும் சோகம்
கோவை: தென்கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் ஒரு உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆன்மிக உணர்வோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் ஏறும் இந்த மலைப்பாதையில், உடல்நலக்குறைவு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி உயிர்ப்பலிகளை வாங்கி வருவது கவலைக்கிடமாக மாறியுள்ளது. வனத்துறை தொடர்ந்து எச்சரித்து வரும் சூழலில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை, "தென்கைலாயம்" என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மகாசிவராத்திரி மற்றும் சித்திரை மாதங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைக்கு ஏறிச் செல்வது வழக்கம். ஆனால் கடினமான ஏற்றப் பாதை, கடும் வெப்பம், உடல் சோர்வு, ஆக்சிஜன் குறைபாடு போன்ற காரணங்களால் அடிக்கடி உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.

கவனம் மக்களே
குறிப்பாக இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மலை ஏறும்போது அதிக ஆபத்து ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களில் பலர் மூச்சுத்திணறல், மாரடைப்பு, உடல் சோர்வு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளதால், மருத்துவ பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், பக்தர்கள் தங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மட்டுமே மலை ஏற வேண்டும் என்றும், உடல்நலக்குறைவு இருந்தால் சாகசமாக முயற்சிக்க வேண்டாம் என்றும் வனத்துறையும் மருத்துவர்களும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
4 ஆவது மலையில்..
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை, கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (32). இவர் ஆன்மிக ஈடுபாடு காரணமாக இன்று அதிகாலை தனியாக வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கு ஏறிச் சென்றுள்ளார். ஏழு மலைகளை கடந்தே சுயம்பு சிவனை தரிசிக்க வேண்டிய இந்த மலைப் பாதையில், 4-வது மலையில் உள்ள 'முழங்கால் திட்டு' பகுதியில் அவர் மயங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று, டோலி மூலம் அவரை மீட்டு அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், மயில்சாமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் மலை ஏறியிருந்த மற்ற பக்தர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
திடீர் நெஞ்சுவலி
விசாரணையில் வெளியாகிய தகவல்கள் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. மயில்சாமி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும் வெள்ளியங்கிரி மலை ஏற முயன்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாதியிலேயே இறங்கி வந்து சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, "இப்போதைக்கு மலை ஏற வேண்டாம்" என குடும்பத்தினரும் உறவினர்களும் எச்சரித்துள்ளனர். ஆனால், யாரிடமும் தெரிவிக்காமல் இன்று அதிகாலை மீண்டும் தனியாக மலை ஏறிச் சென்றபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
மயில்சாமிக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தினரின் எச்சரிக்கையை மீறி சென்ற அவரது முடிவு தற்போது குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications