பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன..தலைமுறை நம்மைக் கவனிக்கிறது - கமல் ட்வீட்
வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோவை : வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். எதிர் தரப்பை எதிரி தரப்பு என கருதுவது முதிர்ச்சியின்மை; யாகாவாராயிலும் நாகாப்போம் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் பிரசார களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்காமல் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பல வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டனர்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில்
வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.
மநீம அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு வானதி சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேருக்கு நேர் விவாதம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தார், அதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் கமல்ஹாசன் விவாதம் நடத்துவார் என்றும் வானதி சீனிவாசன் மாதிரியான துக்கடா அரசியல்வாதிகளுடன் விவாதம் செய்ய மாட்டார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண்களை அவமானப்படுத்துவதா?
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட வானதி சீனிவாசன், பெண்களை கமல் கட்சியினர் மதிப்பதில்லை என்று கூறினார். எளிய குடும்பத்தில் பிறந்து அரசியலில் வெற்றி பெறும் பெண்களை அவமானப்படுத்துவதா என்றும் கேள்வி எழுப்பினார்.
நானா துக்கடா அரசியல்வாதி
இன்று தேர்தல் பிரசாரம் செய்த வானதி சீனிவாசன், என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்கின்றனர் மக்கள் நீதி மையம் கட்சியினர். அந்த நடிகரை பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர் என்று சொன்னார்.
உதட்டளவில் சேவை
லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா? மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் கமலஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
|
கமல்ஹாசன் ட்வீட்
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன என்று பதிவிட்டுள்ளார். எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.