கோவை அன்னூரில் கல்லூரி மாணவிக்கு இப்படியா ஆகணும்.. உறவினர்கள் எடுத்த அதிரடி முடிவு
கோவை: கோவை மாவட்டம், அன்னூரில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன்-பத்மாவதி தம்பதியின் மகள் ஹரிணி மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சிறு வயதில் இருந்தே மூச்சு விடுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த 18ம் தேதி அன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மாணவி ஹரிணி காலமானார். இந்நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், அன்னூர் சத்தி ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவி பத்மாவதி. பத்மாவதி அன்னூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர் ஆவார். இவர்களது மகள் ஹரிணி (19), மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சில ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார்.

ஹரிணியை பத்மாவதி தான் வளர்த்து வந்துள்ளார். ஹரிணிக்கு 13 வயதில் இருந்து மூச்சு விடுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்காக அவ்வப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்படித்தான் அவருக்கு கடந்த 18-ந் தேதி மூக்கில் வலி அதிகமானது. மீண்டும் அன்னூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சென்று காட்டியுள்ளார். அப்போது அவர், அன்னூர் அருகே காட்டம்பட்டி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தால் குறைந்த செலவு குறையும் என்று கூறினாராம். அதன்படி அங்கு அறுவை சிகிச்சையின் போது மாணவியின் உடல்நிலை மோசமானது.
உடனே அவரை மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது அவர் இறந்தது தெரிய வந்தது. இதனால் பதறிய மாணவியின் தாயார் பத்மாவதி அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாணவியின் உறவினர்கள் காட்டம்பட்டியில் உள்ள பேரூர் அடிகளார் மருத்துவமனைக்குச் சென்று சாவுக்கான காரணம் குறித்துக் கேட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், அவருடன் படித்த மாணவிகளும் அன்னூர்-கோவை சாலையில் காட்டம்பட்டி பிரிவு பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.














Click it and Unblock the Notifications