கோவை சூலூரில் தேனியைச் சேர்ந்த 7 நண்பர்கள் அறையில் மது அருந்திய போது.. 2 தவறால் முடிந்த வாழ்க்கை
கோவை : கோவை சூலூர் அருகே தேனியைச் சேர்ந்த 7 நண்பர்கள் அறையில் மது அருந்திய போது செய்த சிறிய தவறு.. அவர்களின் வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டது. இந்த தீ விபத்தில் தேனியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 நண்பர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த 30 வயதாகும் அழகர்ராஜா, கோவையில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக இவர் கோவையை அடுத்த சூலூர் அருகே முத்துகவுண்டன் புதூர் சோமனூர் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்திருக்கிறார்

அழகர்ராஜா உடன் அதே ஊரை சேர்ந்த 24 வயதாகும் முத்துக்குமார், தினேஷ்குமார், பாண்டீஸ்வரன், வீரமணி உள்ளிட்டோர் தங்கி இருந்தனர். அதே அறையில் கோவை வாகராயம்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தேனியை சேர்ந்த நண்பர்களான சின்னகருப்பு என்ற கருப்புசாமி (26), மனோஜ் ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு வந்து தங்கினர். மிகச்சிறிய வீட்டில் 7 பேரும் அந்த சிறிய அளவிலான வீட்டில் தங்கி இருந்தனர்.
இதில் அழகர்ராஜா, முத்துக்குமார், தினேஷ்குமார், வீரமணி, பாண்டீஸ்வரன் ஆகிய 5 பேரும் டேங்கர் லாரி டிரைவர்கள் ஆவர். இவர்கள் கோவை இருகூரில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருந்து பெட்ரோல், டீசலை டேங்கர் லாரிகளில் கொண்டு செல்வது வழக்கமாகும். அப்போது அவர்கள், மீதமாகும் பெட்ரோல், டீசலை சேகரித்து வீட்டில் வைத்து இருந்திருக்கிறார்கள்.
அழகர்ராஜா நேற்று முன்தினம் காலை டேங்கர் லாரியை ஓட்டிச்சென்றுள்ளார் அந்த லாரி, சிங்காநல்லூர் ராவுத்தர் பிரிவு பகுதியில் சுப்பராயன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை புஷ்பலதா (54) ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில் புஷ்பலதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் அழகர்ராஜாவை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இதனால் அழகர்ராஜா நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அங்கு அவர் தனது நண்பர்களான சின்ன கருப்பு, பாண்டீஸ்வரன், தினேஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்தாராம். மது போதையில் இருந்த அழகர்ராஜா, இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என வீட்டிலிருந்த 10 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து எரியும் கியாஸ் அடுப்பின் அருகே வைத்து ஒரு லிட்டர் கேனுக்கு மாற்றினாராம். அப்போது பெட்ரோல் சிதறி கீழே கொட்டியிருக்கிறது.
அப்போது அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீயில் பெட்ரோல் தெறித்ததால் குபீரென தீப்பிடித்தது. இந்த அதிர்ச்சியில் பெட்ரோல் கேனை கீழே போட்டபோது அந்த அறை முழுவதும் குபீரென தீப்பற்றியது. அறைக்குள் இருந்த 7 பேரும் உள்ளே வசமாக சிக்கி கொண்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சல் போட்டனர். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.
இது குறித்த தகவலின் பேரில் சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டிற்குள் இருந்த 7 பேருக்கும் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதில் லாரி டிரைவர் அழகர்ராஜா, சின்னக்கருப்பு, முத்துக்குமார் ஆகிய 3 பேரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், வீரமணி, மனோஜ் ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் பாண்டீஸ்வரனிடம் கோவை மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார்.
வீட்டில் பெட்ரோலை சேகரித்தது முதல் தவறு என்றால், இரண்டாவது தவறு மது போதையில் அதை எடுத்து ஊற்ற முயன்றது. அப்போது தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை. தப்பித்தவறி சிலிண்டர் வெடித்திருந்தால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் சேர்ந்து இறந்து போயிருப்பார்கள். நல்லவேளையாக தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கியாஸ் சிலிண்டரை குளிர்வித்து வெளியே எடுத்துவிட்டார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கோவை சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications