ஐந்து நாட்கள் நடந்த வருமான வரித்துறை ரெய்டு.. உண்மையில் என்ன நடந்தது! மார்டின் குழுமம் பரபர விளக்கம்
கோவை: தொழிலதிபர் லாட்டரி மார்டின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், இது தொடர்பாக அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கோவை அடுத்துள்ள துடியலூர் வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்டின் வீடு உள்ளது. அருகிலேயே மார்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இது தவிர கவுண்டர்மில் பகுதியில் மார்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும் காந்திபுரம் பகுதியில் மார்டின் குழுமத்திற்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர்.
ரெய்டு: பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். அதன்படி கடந்த அக். 12ஆம் தேதி காலை 7 மணியளவில் தொடங்கிய இந்த ரெய்டு நேற்று அக். 16ஆம் தேதி காலை 10 மணிக்கு நிறைவடைந்தது. இதற்கிடையே இந்த ஐடி ரெய்டு தொடர்பாக மார்ட்டின் குழுமம் முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
அதில் அவர்கள், "எங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது கொல்கத்தா வருமான வரித்துறை அதிகாரிகள் தானே தவிர, அமலாக்கத் துறை அதிகாரிகள் இல்லை. ஐடி அதிகாரிகள் நடத்திய இந்த சோதனைக்கு எங்கள் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்கினர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்கத் துறை சோதனை நடத்தியாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
விளக்கம்: அடுத்து அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் லாட்டரி விற்பனையை நடத்துகிறோம். 2002-2003 ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்ச தனிநபர் வருமான வரியைச் செலுத்தியது எங்கள் குழுமத் தலைவர் மார்டின்தான். சுமார் 100 கோடி ரூபாயை அவர் வருமான வரியாகச் செலுத்தியுள்ளார். மேலும், 2017 முதல் செப். 2023 வரை ஜிஎஸ்டியாக மார்டின் குழுமம் 23,119 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது.
1985-1986 முதல் 202-203 நிதி ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.4,577 கோடி வருமான வரி செலுத்தியுள்ளோம். முந்தைய நிதியாண்டில் மட்டும் வருமான வரியாக 600 கோடி ரூபாய் செலுத்தியுள்ளோம். அப்படி இருக்கும் போது சோதனை தொடர்பாகப் பொய்யான தகவல்கள் பரவியதால் அது குறித்து விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications