ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக கூட்டணி புறக்கணித்தது ஏன்? அண்ணாமலை விளக்கம்.. கவனிக்கும் திமுக
கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக கூட்டணி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதன் பின்னணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் விளக்கம் அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார். அவர் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பதில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை பொங்கல் நாளில் அறிவிக்க உள்ளது. அதிமுக, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இன்று பாஜக கூட்டணியும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளது.
இந்நிலையில் தான் தேர்தலை புறக்கணித்தது ஏன்? என்பது பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில்எங்கேயும் பாஜக தேர்தலை புறக்கணிக்கவில்லை. நக்சல், தீவிரவாதிகள் நடமாட்டம் பகுதிகளாக இருந்தாலும் சரி வடகிழக்கு மாநிலமாக இருந்தாலும் சரி தேர்தலில் பங்கேற்போம். தமிழகத்தில் எந்த அளவுக்கு லஞ்சம், லாவண்யம், ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது சாதாரணமாக நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேர்தல் என்பது நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு தேர்தலை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். கடந்த முறை மக்களை எப்படி பட்டியில் அடைத்து வைத்தார்களோ, அதுபோல் தேசிய ஜனநாயக கூட்டணி நின்று இருந்தால் பட்டியில் அடைத்து வைத்து இருப்பார்கள். மக்களுக்கு அந்த வலி வேண்டாம் என்று நினைக்கிறோம். அதேபோல் மக்கள் இந்த வலியை உணர்வார்கள் என்று நினைக்கிறோம்.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எல்லோரும், அதிமுகவில் ஆரம்பித்து தேசிய ஜனநாயக கூட்டணி, கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணிப்பதை முதல்முறையாக பார்க்கிறேன். தமிழக மக்கள் எதற்கு என்று கேள்வி கேட்பார்கள்?. இத்தனை கட்சிகள் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது ஏன்? என்று பரிசீலனை செய்வார்கள். மக்களே ஒரு உந்துதலை தருவார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும், நோட்டாவுக்கு வாக்களித்தாலும் மக்கள் மனசாட்சிப்படி தவறு செய்யும் கட்சிக்கு தேர்தலில் சாட்டையடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையால் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். அதேவேளையில் தேர்தல் நடக்கும்போது ஒரு சாதாரண மனிதராக கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் இந்த தேர்தலை கண்காணிப்போம். எங்களின் ஜனநாய கடமையை நாங்கள் கண்காணித்து செய்வோம். தமிழகத்தில் அடக்குமுறை, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, பணம், கொலுசு, பட்டியில் அடைப்பது, பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றின் மூலம் ஒரு 15 நாளில் தேர்தலையே கேவலப்படுத்தும் விதமாக திமுகவின் செயல்பாடு என்பது உள்ளது.'' என்றார்.












Click it and Unblock the Notifications