நண்பர்.. இலங்கையில் ராஜபக்சேக்களை சந்தித்த பாஜகவின் சு.சாமி.. நவராத்திரி பூஜையில் பங்கேற்பு! பின்னணி
கொழும்பு: இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் அதிபர், பிரதமர் பதவியை இழந்த கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரை பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி திடீரென்று சந்தித்து பேசினார்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதே இதற்கு காரணமாகும்.
இந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிரமங்களை சந்திக்க தொடங்கினர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கையில் கொழும்பு அருகே பெரும் தீ விபத்து.. இரவில் நடந்த கொடூரம்.. 60 வீடுகள் எரிந்து நாசம்!
பொதுமக்கள் போராட்டம்
இலங்கையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தன. தலைநகர் கொழும்பு உள்பட சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதனால் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அதோடு பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரின் தவறான கொள்கைகள் தான் காரணம். இவர்கள் 2 பரும் பதவி விலக வேண்டும் என்று கூறினர்.
புதிய அதிபர்-பிரதமர்
நீண்ட இழுபறிக்கு பிறகு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். முன்னதாக பொதுமக்கள் போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். தற்பாது இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக தினேஷ் குணவர்த்தனே உள்ளனர்.
ராஜபக்சேக்களை சந்தித்த சுப்பிரமணியசாமி
இந்நிலையில் தான் இலங்கை சென்ற பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அந்நாட்டின் முன்னாள் அதிபர்களான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சோ ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் இரவு மகிந்த ராஜபக்சேவுடன் சந்தித்து பேசிய சுப்பிரமணியசாமி நேற்று கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் சுப்பிரமணிய சாமி பங்கேற்றார். சுப்பிரமணியசாமி, ராஜபக்சே குடும்பத்துக்கு நண்பராக உள்ளார். இந்நிலையில் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
முதல் வெளிநாட்டு தலைவர்
இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகி வெளிநாடு தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் தான் இலங்கை திரும்பினார். அதன்பிறகு அவரை வெளிநாட்டு தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை. இந்நிலையில் தான் முதல் நபராக சுப்பிரமணிய சாமி சந்தித்து பேசியுள்ளார். சுப்பிரமணியசாமி கொழும்புவில் உள்ள ஜெனரல் சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதரம் குறித்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்று நேற்று பேசினார். இதற்காக இலங்கை சென்ற சுப்பிரமணியசாமி தான் ராஜபக்சே சகோதரர்களை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.