பிரபாகரன் இல்லவே இல்லை- டக்ளஸ் தேவானந்தா; விரைவில் உலகத் தமிழருக்கு மகிழ்ச்சி செய்தி: சிவாஜிலிங்கம்!
பிரபாகரன் குறித்து உலகத் தமிழருக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்கிறார் உறவினரான ஈழத் தமிழ் அரசியல் தலைவர் சிவாஜிலிங்கம்.
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த உலகத்திலேயே இல்லை; ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பதில்தான் பல கருத்துகள் இருக்கின்றன என இலங்கை மீன்வளத்துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; நலமுடன் இருக்கிறார்; அவரது அனுமதியுடன் உலகத் தமிழர்களுக்கு இந்த தகவலை அறிவிக்கிறேன் என தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கவிஞர் காசி ஆனந்தன் உடன் இருந்தார்.

பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கூறுகையில், என்னுடன் தொடர்பில் உள்ள போராளிகள் இப்படி ஒரு தகவலை உறுதி செய்யவில்லை. பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி என்றார். ஆனால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ, பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை பலி கொடுத்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருப்பாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இலங்கை ராணுவமோ, பிரபாகரன் இறந்துவிட்டார்; எங்களிடம் டிஎன்ஏ ஆதாரங்களே இருக்கிறது என திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் இலங்கை தலைவர்களிடம் பிபிசி நிறுவனம் இது தொடர்பாக கருத்துகள் கேட்டிருந்தது. அதில் ஈழத் தமிழர்களிடம் செயல்படும் ஈபிடிபி கட்சித் தலைவரும் இலங்கை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பிரபாகரன் உலகத்தில் எங்குமே இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பதுதான் விவாதத்துக்குரியது. அதைப் பற்றி பேசவும் விரும்பவில்லை. பழ.நெடுமாறன் தெரிந்து பேசுகிறாரா? அல்லது தெரியாமல்தான் பேசுகிறாரா? என கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக பிள்ளையான் கூறுகையில், இறுதி யுத்தத்தில் பல புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லுகிற பழ.நெடுமாறன்தான் இதனை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்றார். உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல், பழ.நெடுமாறன் சொல்வதில் உண்மை இல்லை. அதை ஏற்கவும் முடியாது. இதற்கு முன்னரும் நெடுமாறன் இப்படி சொன்னார். அப்போதும் அதை நான் ஏற்கவே இல்லை என்றார்.
ஆனால் பிரபாகரனின் உறவினரான தமிழ் அரசியல் தலைவர் சிவாஜிலிங்கம், பழ.நெடுமாறனின் அறிவிப்பு மூலமாக உலகம் முழுவதும் பரவி வாழும் உலகத் தமிழருக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்கிறார்.
அதேநேரத்தில் இலங்கை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பிரபாகரன் நரகத்தில் இருக்கிறார்; பழ.நெடுமாறன், நரகத்துக்குப் போய் பிரபாகரனை அழைத்துவரட்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications