இலங்கை மின்சார திட்டத்தை அதானியிடம் கொடுக்க சொன்னாரா மோடி? எழுந்த சர்ச்சை.. கோத்தபய மறுப்பு
கொழும்பு: இலங்கை மின்சார சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய சட்ட திருத்தம் அங்கு பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதானிக்கு ஆதரவாக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் வகையில் அங்கு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் வைத்துள்ளன. பிரதமர் மோடி பெயரும் இந்த விவாதத்தில் அடிபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் 1989ல் கொண்டு வரப்பட்ட மின்சார சட்டத்தின்படி பெரிய மின் திட்டங்கள், ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு டெண்டர் விடப்பட வேண்டும். அதாவது பெரிய சோலார் மின் திட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு டெண்டர் விட வேண்டும்.
பல நிறுவனங்கள் கலந்து கொண்டு, இந்த டெண்டரில் குறைந்த விலையை தெரிவிக்கும் நிறுவனங்கள் டெண்டரை வெல்லும். ஆனால் இந்த 23 வருட பழைய சட்டத்தில் அந்நாட்டு அரசு மாற்றம் மேற்கொண்டுள்ளது.

சட்ட திருத்தம்
கடந்த வியாழக்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை பொதுஜன கட்சி மூலமாக இதில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தம்படி புதிய மின் ஒப்பந்தங்களை மேற்கொள்ள, அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதற்கு டெண்டர் விட வேண்டியது இல்லை. அரசு யாருக்கு கொடுக்க நினைக்கிறதோ கொடுக்கலாம். இந்த சட்ட திருத்தத்திற்கு 120 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்தது.

எதிர்ப்பு
10 மெகா வாட்டிற்கு மேலே எந்த மின் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் அது டெண்டர் முறைப்படி மட்டுமே செய்யப்பட வெந்தயம் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறியது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக 36 எம்பிக்கள் வாக்களித்தனர். அதானி உடன் மின்சார ஒப்பந்தத்தை மேற்கொள்ள வசதியாக இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி புகார் வைத்தது. அதோடு சிலோன் மின்சார போர்ட் அமைப்பும் இதை எதிர்த்தது.

அதானி புகார்
இந்த சட்ட திருத்தம் மூலம் அதானியை உள்ளே கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அவருக்கு ஒப்பந்தம் கொடுக்கும் விதமாக இந்த திருத்தத்தை மேற்கொண்டு உள்ளனர். முதலில் அதானி ஒரு யூனிட்டை 6.50 சென்ட்டிற்கு தருவதாக கூறினார். இப்போது அதை 7.55 சென்ட்டாக உயர்த்தி உள்ளார் என்று சிலோன் மின்சார போர்ட் விமர்சனம் வைத்துள்ளது. இதற்கு எதிராக அவர்கள் போராட்டமும் செய்தனர்.

போராட்டம்
இந்த நிலையில் போராட்டத்திற்கு இடையில் நேற்று முதல் நாள் அந்நாட்டு பாராளுமன்ற கமிட்டி முன்பாக சிலோன் மின்சார போர்ட் தலைவர் பெர்டினான்டோ விளக்கத்தில், அதானி நிறுவனத்துடன் கடந்த வருடம் அரசு 500 மெகாவாட் மின்சார உற்பத்தி திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்தது. இலங்கையில் வடகிழக்கு பகுதியில் இந்த மின்சார உற்பத்தி திட்டம் அமைய உள்ளது. இந்த ஒப்பந்தத்தை அதானியிடம் கொடுக்கும்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக, என்னிடம் அதிபர் ராஜபக்சே தெரிவித்தார் என்று, பெர்டினான்டோ வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது எப்படி?
அதாவது பிரதமர் மோடி சொல்லித்தான் இந்த ஒப்பந்தத்தை அதானியிடம் கொடுத்தேன் என்று ராஜபக்சே தன்னிடம் கூறியதாக பெர்டினான்டோ தெரிவித்தார். ஆனால் இதை உடனே கோத்தபய ராஜபக்சே மறுத்தார். இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை.. இந்த ஒப்பந்தம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது, என்று மறுத்தார். இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சிலோன் மின்சார போர்ட் தலைவர் பெர்டினான்டோ, நான் என் கருத்தை திரும்ப பெறுகிறேன். நான் தவறுதலாக அப்படி கூறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications