இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சர்ச்.. பலத்த பாதுகாப்புடன் பிரார்த்தனைக்காக இன்று திறப்பு
கொழும்பு: இலங்கையின் கொழும்பு நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த புனித அந்தோனியர் தேவாலயம் இன்று பிரார்த்தனைக்காக திறக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பு புனித அந்தோனியர் தேவாலயம் உள்பட பல்வேறு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தொடர் கொண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த 44 பேர் உயிரிழந்தனர். இதேபோல் இறந்து போனவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் ஆவர்.
கொழும்பில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த புனித அந்தோனியர் ஆலயம் பலத்த பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. குண்டு வெடிப்பில் சிதைந்த பகுதிகள் புனரமைக்கும் பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது. தேவலாயத்திற்குள் பிரார்த்தனை செய்ய வருபவர்கள் அதற்கென்ற சிறப்பு பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 12 மணி நேரம் திறந்து இருக்கும் என தேவாலய பிஷப், கார்டினல் மொர்கோம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
புத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையின் மக்கள் தொகை 2 கோடியே 10 லட்சம். இதில் 7.5 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவர்.