இலங்கையில் மக்கள் எழுச்சி.. அமைச்சர்கள் எல்லோரும் கூண்டோடு திடீர் ராஜினாமா.. என்ன நடந்தது?
கொழும்பு: இலங்கையில் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக அரசுக்கு எதிரான அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக அமைச்சர்கள் எல்லோரும் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே அங்கு ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. 1948க்கு பின் இலங்கையில் நிலவும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த அதிகாரத்தையும் கிட்டத்தட்ட ராஜபக்சே குடும்பம்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. பிரதமர், அதிபர், பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய 9 பொறுப்புகள் ராஜபக்சே குடும்பத்தின் கையில்தான் இருக்கிறது.

போராட்டம்
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தை எதிர்த்தும், பொருளாதார சரிவை சரி செய்ய கோரியும் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அதேபோல் கடந்த 36 மணி நேரமாக அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இதையும் மீறி நேற்று நாடு முழுக்க மக்கள் போராட்டம் நடத்தினர். இப்படி போராடிய மக்களில் 664 பேர் ராணுவம் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இலங்கை பொருளாதாரமே
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்தான் நேற்று இரவு அமைச்சர்கள் எல்லோரும் ராஜினாமா செய்தனர். முதலில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து எல்லா அமைச்சர்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். கட்சி அலுவலக கூட்டத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

26 பேர் ராஜினாமா
முன்னதாக நமல் ராஜபக்சே இலங்கையில் இணையம் துண்டிக்கப்பட்டதை விமர்சனம் செய்து இருந்தார். இணையத்தை துண்டிப்பது எந்த வகையிலும் உதவாது. அது தவறான முடிவு என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து முதல் ஆளாக ராஜினாமா செய்துள்ளார். நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்வதாக தகவல்கள் வந்தன. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று பிரதமர் அலுவலகம் மறுத்தது.

பிரதமர் ராஜினாமா இல்லை
நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சேவைத் தவிர ஒட்டு மொத்தமாக 26 அமைச்சர்களும் பதவி விலகுவதாக கூட்டு கடிதம் அளித்தனர். இந்த செய்தியை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அங்கு தற்போது வேறு சில எம்பிக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். எம்பிக்கள், பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு பின் அங்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை நிலை
இலங்கையில் அமைச்சர்கள், பிரதமர் எல்லோரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக சரிந்து வந்த பொருளாதாரம் அங்கு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. முக்கியமாக அந்நிய செலாவணிக்கான டாலர் கையிருப்பு இலங்கையில் பெரிய அளவில் குறைந்துள்ளது. இலங்கையில் 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 297.99 ஆக உயர்ந்து உள்ளது. இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 260 ரூபாய் வரை தொட்டுள்ளது. டீசல் விலை 210 ரூபாய் வரை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications