எலான் மஸ்க் தெரியும்.. இந்த "சிலோன் மஸ்க்" தெரியுமா? அதிர்ச்சி தந்த கோடீஸ்வரர்.. பிதுங்கும் மக்கள்!
கொழும்பு: உங்கள் பலருக்கும் எலான் மஸ்க் தெரிந்து இருக்கும்.. உலகின் நம்பர் 1 பணக்காரர். ஏன் மனித குல வரலாற்றிலேயே அதிக பணம் கொண்ட நபர்களில் இவரும் ஒருவர்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என்று உலகின் டாப் நிறுவனங்களை உருவாக்கி வழி நடத்தி வருபவர். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 27,360 கோடி அமெரிக்க டாலர்.
அதாவது 21 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து இவரிடம் உள்ளது. வரும் நாட்களில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மூலம் இன்னும் பல லட்சம் கோடிகளை இவர் சம்பாதிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்
இந்த நிலையில்தான் தனது வளத்தை பயன்படுத்தி ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை மஸ்க் வாங்கினார். இந்த நிலையில் ட்விட்டரை மொத்தமாக 43 பில்லியன் டாலருக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்துள்ளார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் இதுவரை இந்த ஆபரை ஏற்கவில்லை.

தொகை என்ன
இந்த நிலையில்தான் தற்போது இணையம் முழுக்க எலான் மஸ்க் என்பதற்கு பதிலாக சிலோன் மஸ்க் என்ற வார்த்தை டிரெண்டாகி வருகிறது. இது யாருப்பா புது ஆளா? வேறு பணக்காரரா.. எலான் மஸ்க் பங்காளியா என்று கேட்க வேண்டாம். எலான் மஸ்க்கைத்தான் இப்படி சிலோன் மஸ்க் என்று கிண்டல் செய்து வருகின்றனர். அட இவருக்கும் சிலோனுக்கும் (இலங்கை) என்ன பாஸ் தொடர்பு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.

சிலோன் மஸ்க்
இலங்கைக்கு மொத்தம் 52 பில்லியன் டாலர் கடன் இருக்கிறது. அதாவது ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் கொடுக்க போகும் 43 பில்லியன் டாலரை விட வெறும் 8 பில்லியன் டாலர் மட்டுமே அதிகம். அதாவது கையில் ட்விட்டர் வாங்க மஸ்க் வைத்திருக்கும் காசில் ஒரு 8 பில்லியன் டாலர் போட்டால் போதும் இலங்கையின் கடன் மொத்தமாக அடைந்துவிடும். அந்த நாடும் கடனில் இருந்து தப்பிவிடும்.

கடன் என்ன
பல கோடி பேர் வசிக்கும் ஒரு நாட்டின் மொத்த கடனை அடைக்கும் அளவிற்கு பலம் கொண்டவராக மஸ்க் இருப்பதே ஆச்சர்யம் அளிக்கும் விஷயம்தான். அதே சமயம் அந்த பணத்தில் இவர் ஒரே ஒரு ஆப்பை வாங்க நினைப்பதுதான் பலரையும் வியக்க வைத்துள்ளது. அவர் இந்த பணத்தை கொடுத்தால் இலங்கையில் பரிதாபமாக கஷ்டப்படும் மக்களை காக்க முடியும். வறுமையில் பிதுங்கி நிற்கும் மக்களை காக்க முடியும்.

இலங்கை கடன்
ஆனால் அவரோ ட்விட்டர் 43 பில்லியன் ரூபாய்க்கு ஒரு ஆப்பை வாங்க போகிறார். வேடிக்கையாக இருக்கிறது என்று பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இன்னும் சிலரோ உலகில் நிலவும் சமத்துவமற்ற தன்மையை இது காட்டுகிறது. ஒரு நாடே வைத்திருக்க வேண்டிய தொகை ஒருவரிடம் மட்டுமே குவிவது தவறு என்றும் பலர் விமர்சனம் செய்துள்ளனர். இன்னும் சிலரோ இலங்கை கஷ்டப்படுவது இலங்கை ஆட்சியாளர்களின் தவறு.. அதற்கு ஏன் எலான் மஸ்க் உதவ வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications