காளி அவதாரம்.. இந்த ஹோட்டலை மட்டும் சிங்களர்கள் தேடி தேடி தீ வைத்தது ஏன்? யார் இந்த ஜோசியர் அக்கா?
கொழும்பு: இலங்கையில் வலிமையான பெண்களில் ஒருவராக பார்க்கப்படும் ஷாமன் ஞான அக்காவின் ஹோட்டலுக்கு சிங்களர்கள் தீ வைத்துள்ளனர். இலங்கை அதிபருக்கும் முன்னாள் பிரதமருக்கும் நெருக்கமாக பார்க்கப்பட்ட இவர் மீது மக்கள் செம கடுப்பில் இருக்கும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தென்பகுதியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் தொடர்ந்து சிங்களரால் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
அங்கு எமர்ஜென்சி விதிக்கப்பட்டும் கூட மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். அங்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு, அலுவலகம் நேற்று கொளுத்தப்பட்டது.
பற்றி எரியும் இலங்கை.. அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்ச
ஜோசியர் அக்கா
இந்த நிலையில்தான் இலங்கையில் வலிமையான பெண்களில் ஒருவராக பார்க்கப்படும் ஷாமன் ஞான அக்காவின் ஹோட்டலுக்கு சிங்களர்கள் தீ வைத்துள்ளனர். அனுராதபுராவில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சிங்களர்கள் தீ வைத்து உள்ளனர். இலங்கையில் தன்னை காளியின் அவதாரம் என கூறி வந்தவர் ஷாமன் ஞான அக்கா. முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் அட்டெண்டர் பணியில் இருந்தார்.
யார் இவர்
அதன்பின் தன்னை காளியின் அவதாரம் என்று கூறி, ஆன்மீகத்தில் குதித்தார். தொடக்கத்தில் இவருக்கு குறைவாக பின்தொடர்பாளர்கள் வர போக போக இவர் தனது ஜோசிய வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்தார். விளைவு நாட்டில் அதிகம் கவனிக்கப்படும் சாமியாராக இவர் மாறினார். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே என்று பலரும் இவரிடம் ஜோசியம் பார்க்க வந்தனர்.
காளி அவதாரம்
அருள் வழங்குவது, எதிர்காலத்தை சொல்லுவது, அரசுக்கு ஆன்மீக குருவாக இருந்து ஆலோசனை வழங்குவது இதுதான் ஷாமன் ஞான அக்காவின் வேலை. அரசுக்கு ஆலோசனை சொல்ல இவர் யார் என்று பொதுமக்கள் கேள்வி கேட்டாலும் தொடர்ந்து இவரிடம் மஹிந்தவும், கோத்தபயவும் பலமுறை ஆலோசனை கேட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில் மஹிந்தவின் மாஸ்டர் மைண்ட் போலவும் இவர் பார்க்கப்பட்டார். இலங்கையில் போராட்டங்கள் தொடங்கிய போது அதை சரி கட்ட இவர் பல ஆலோசனைகளை சொல்லி இருக்கிறாராம்.
இலங்கை போராட்டம்
அதாவது இலங்கையில் போராட்டம் நடப்பதை எப்படி நிறுத்துவது என்று இவர் அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். உதாரணமாக பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டாம். போராளிகளை நம்ம பக்கம் இழுக்கலாம் என்பது போன்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் கொடுத்துள்ளார். இதற்காக அவர் வசியம் வைக்கும் வேளையிலும் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோசியர் அக்கா என்று அழைக்கப்படும் ஷாமன் ஞான அக்கா இதற்காக போராளிகளுக்கு எதிராக வசியமும் வைத்துள்ளார்.
வசியம்
தன்னுடைய பகுதியில் இருக்கும் மலைகளுக்கு சென்று அங்கிருந்து மந்திர சக்தி கொண்டதாக சொல்லப்படும் பூக்களை கொண்டு வந்தும், இந்தியாவில் இருந்தும் பூ ஒன்றை கொண்டு வந்தும், அதை வைத்து புனித தண்ணீர் உருவாக்கி உள்ளார். இது வசியம் வைப்பதற்கான தண்ணீர் ஆகும். இதைத்தான் லிட்டர் கணக்கில் போராட்டம் நடக்கும் கோட்ட கோ காமா பகுதிக்கு இவர் அனுப்பினார். அங்கு போராடும் மக்களுக்கு தண்ணீர் குடிக்க இதை கொடுத்துள்ளார்.
போராளிகள் கோபம்
அதாவது போராளிகள் இதை குடித்தால் வசியம் செய்யப்பட்டு.. போராட்டத்தை கைவிடுவார்கள் என்பதுதான் இவரின் வாக்கு. போராளிகளும் இது ஷாமன் ஞான அக்கா கொடுத்த தண்ணீர் என்று தெரியாமல் குடித்துள்ளனர். ஆனால் போராட்டம் நிற்பதற்கு பதிலாக இன்னும் வீரியம்தான் அடைந்துள்ளது. இப்போது இவர் ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இவரின் மடத்தை முற்றுகை இட முயன்றனர்.
தீ வைப்பு
ஆனால் அதற்குள் ஷாமன் ஞான அக்கா தப்பித்து வேறு இடத்திற்கு ஓடி விட்டார். இலங்கையில் அரசு எடுத்த தவறான முடிவிற்கு இவரும் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாமன் ஞான அக்காவின் ஹோட்டலுக்கு சிங்களர்கள் தீ வைத்துள்ளனர். இலங்கை அதிபருக்கும் முன்னாள் பிரதமருக்கும் நெருக்கமாக பார்க்கப்பட்ட இவர் மீது மக்கள் செம கடுப்பில் இருக்கும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.